April 25th, 2007

சங்கர ராமசுப்ரமணியன் கவிதை



சென்னையை சேர்ந்த சங்கர ராமசுப்ரமணியன்
எழுதிக்கொண்டிருக்கிற இளந்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர். நவீன மனிதனின் சிக்கல்கள், இருப்பியல் நெருக்கடிகள் என விரியும் ராமசுரமணியனின் கவிதையுலகில் எம்மை இனங்கண்டு கொள்ளக் கூடிய இடங்கள் அதிகம். ‘தக்கைகள் மிதக்கும் நகரம்’ (மருதா வெளியீடு) இவரது முதல் கவிதை தொகுதி. நவீன மனிதனின் இருப்பின் அர்த்தமின்மை, அபத்தம் பற்றிய விமர்சனம் துயரத்துடன் ஒலிக்கும் இக்கவிதை சங்கர ராமசுப்ரமணியனின் இரண்டாவது தொகுப்பான ‘காகங்கள் வந்த வெய்யில்’ (புதுமைப்பித்தன் பதிப்பகம்) இலிருந்து எடுக்கப் பட்டது.

*
யாரும் தொந்தரவு தராத
வெளிச்சமான
விசாலமான அறை அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
துவைப்பதற்கு ஒரு எந்திரமும்
இஸ்திரி போடுவதற்கு ஓவல் வடிவ மேஜையும்
துணிகள் உலரும் ஓய்வெடுத்துக் கொள்ள
ஒரு சோபாவும் தரப்பட்டிருந்தன.
காலை அவன் வருவதற்கு முன்னர்
சுத்தம் செய்ய வேண்டிய துணிகள் வந்திருக்கும்.
யாருடைய தொந்தரவும் இன்றி துவைப்பது
உலர்த்துவது
இஸ்திரி செய்வது
குதூகலம் வரும் போது நிறைய முகசேஷ்டைகள்
செய்து பார்க்க
ஒரு சிறு நிலைக்கண்ணாடி.
இடுப்பில் கைவைத்து புஜம் இறுக்கி
ஒரு சீமானைப் போலத்தான் நான் என்று
சொல்லிக்கொண்டான்.
சோப்பு நீர் ஒரு நதியைப் போல
எளிதாக ஓடுகின்றது.
பணியில் அமர்த்தியவர் கூறிய விடுமுறை
வேறு
ஞாபகத்தில் வந்தது.
ஒரு அரசனுடையதைப் போல் கழிகிறது
எனது நாட்கள் என அம்மாவுக்கு
தனது அடுத்த கடிதத்தை
எழுத தொடங்குவான்.
*



April 25th, 2007

மதிவண்ணன் கவிதைகள்



‘இப்போதெல்லாம் / உன் வாயிலடைக்க / கைகளில் கொண்டு திரிகிறேன் / தூமைத் துணிகளையும் / தூமையில் தோய்ந்த
இக்கவிதைகளையும்.’ என்று எழுதும் மதிவண்ணன் அருந்ததியர் குலத்தை சேர்ந்தவர். தலித் கவிஞர்களுள் தனக்கான அழகியலுடன், தனித்துவத்துடன் தடைகளற்று எழுதும் மதிவண்ணன் நவீனத்துவ கற்பிதங்களை சிதறடிக்கும் எதிர்-அழகியலை வலிமையாக கவிதைகளில் இயக்கமுறச் செய்பவர். நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற தமிழ் இன மான உணர்வுகளையும் நாகரீகங்களையும் இற்று விழச் செய்யும் முயற்சிகளே இக்கவிதைகள். ‘வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை’ கற்றுக்கொள்ள மதிவண்ணனைக் கற்க வேண்டும்.

இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன: ‘நெரிந்து…’ வெளியீடு - கருப்பு பிரதிகள். ‘நமக்கிடையிலான தொலைவு’ வெளியீடு - கருப்பு பிரதிகள்.
பின்வரும் கவிதைகள் ரோஸாவசந்த்தின் வலைப்பதிவிலிருந்து பெறப்பட்டவை.

nerinth.GIF
***
1.
ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணேயெனினும்
மூளையன்றோடு பிணைத்துன்
கழுத்தை சுற்றி கிடக்கும் வலிய சங்கிலியின்
இரும்புக் கண்ணிகளை
கடித்துக் கொண்டாவது இரு.

2.
ஊர்த்தெரு நடுவில் நொத்தப்பட்ட
உள், வெளி வலிமரக்க ஊற்றிக்கொண்ட
தகப்பனின் போதைப் புலம்பலில்
யுகங்களின் வலி வெளிப்படுகையில்
கையாலாகாமற் குமையும் இம்முகத்தின் உள்ளீடும்,

விழிமலர் விரிப்பில் வீழ்ந்து
கொஞ்சு மொழிப் புதிர்ப் பொருளில் கிறங்கிக்
கிட்டே போகுங்கால்,
பாட்டன் தூக்கிய பீவாளியிலிருந்தொன்று
புறப்பட்டு வந்து பொறிகலங்கச் சென்னியிலறைய
நொண்டி புறமோடும்
உணர்வு நடுங்கலின் அதிர்வெண்ணும்

அறிவாயா?
என்னை எழுதும் உரிமை நாட்ட
முண்டாத் தட்டும் நீ.
சொல்ல பதிலில்லையெனில்,
தூரமோடிப் போ
எல்லாத்தையும் பொத்திகொண்டு.

3.
தனது அத்தியவசியங்களாலான
மூட்டையைக் கவனமாய் இடுக்கிகொண்டு
தகிக்கும் வெயிலை உணராதவனாய்
நீளமான அந்த கடைவீதியைச்
சளைக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.

கற்கவசம் கட்டிய மனித முகங்களுக்கிடையில்
காற்றின் திசையிலும் பெருக்கதெரியாமல்
மல்லுக்கட்டி கொண்டேயிருக்கிறான்
கடைவீதி வேறு இன்னும் நீளமாயிருக்கிறது.

4.
ஆடை உறுத்தாத நிர்வாணங்கொண்டு
ஒரு பூ மாதிரி என் மீது கவிந்து
ஒவ்வொரு மயிர்காலிலும்
என்னை மீட்டிகொண்டிருக்கிறாய்.

நான் நாறும் சட்டையுடனவன்
திடுமென நுழைந்து தன் கர்ணகடூரக் குரலெழுப்ப
பதறியடித்தெழ வேண்டியதாயிற்று நாம்.

எழுந்து அவனை எதிர்கொள்ளத் தயாராகையில்
நீயுமுன்னை அவசரமாய் பொதிந்து கொண்டோடிப் போனாய்

இதோ!
வந்தவனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத்
துளித்துளியாய் மௌனப் பூத் தெளித்து
இந்த படுக்கையை தயார் செய்கிறேன் திரும்பவும்.

5.
அழுக்கேறிய அரைக்கால் சட்டையுடன்
மலக்குழி சுத்தபடுத்தியவனின் பேரன்
குழாய் மாட்டிகொண்டு
வீதியில் நடப்பது பொறுக்காது
அவன் ஏவி விட்ட நாயிடமும்
நாய் ஏவி விட்ட அவனிடமும்
சிக்கிவிடாது தப்பியோடிய கிலியை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திணைகளை தூக்கிக் கொணரவில்லை யென
ரொம்பத்தான் சடைத்து கொள்கிறாய்.

6.
எல்லாமும் சாத்தியம் தானெனினும்
எதையும் செய்யபோவதில்லை நான்
என்னை கீழாகவும் உன்னை மேலாகவும் காட்ட
எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமில்லாது
நீயணிந்து கொண்ட உயர்முகத்தையும்
கிழித்து கொண்டிருப்பது தவிர.

7.
எவருமறியா உன் ஜட்டிக்கிழிசலை போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்.

சொல்ல துணிவுண்டா உனக்கு?
உன் அந்தரங்களில்
நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்
வேப்பமரத்தடி மணலில்
சூரியனுக்கு தெரியாமல்
நீ புதைத்து வைத்தமுதலாய் விழுந்த சிங்கப்பல்லை போல
ஒரு பாவமுமறியாதவையே என.

8.
எத்தனையாவது முகம் இது?
சண்டாளனென என்னை வரையறுத்த
மனுவின் அழுகல் குறியை ஊம்பி
வல்லமை பெற்ற ஷத்திரியக் கைவாளின்
நினைப்பில் கருகிய முகங்களே அதிகமும்.
இருசக்கர வாகனமொன்றின் பின்னிருக்கையில்
முயக்கத்தில் தோன்றியகணம் கருகிய
இம் முகம் போலும் சில முகங்கள்.
ஒவ்வொரு முகம் கருகும்போதும்
மூர்சையாகிச் செத்தவள் போல் விழுபவள்
புதிது புதிதாய் முளைக்கும் முகங்களுடன்
எழுந்து என்னில் தழும்பி கொண்டிருக்கிறாள்.
முகமும் உருவமுமற்ற என்னுள் உறவாட
உயிர் ஊறிக் கொண்டிருக்கிறது என்னிலிருந்து.

10.
பொருட்படுத்தாது நீ போன கணத்திலிருந்து
புழுத்து வீச்சமெடுத்துக் கொண்டிருக்கிறது.
நாசியைப் பிடித்துக் கொண்டு
வசைகளுடன் கடந்து போகிறவர்களை
சட்டை செய்யாது ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேறொன்றும் செய்திடலாகாது.
உனக்கு படையலிடவென்றே
கடைந்தெடுத்த அமுதமிது.

11.

அ.

என்னை நீ பார்பதென்பது
எப்போதும் என் பின்புறத்தைப்
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறாய்.
நீ மொட்டையாக்கிய இவ்வாலை
குலைக்கும் வேகத்தை,
ஊம் ஊமென குழறும் குழறலை,
உன் காலை மோந்து, நக்கி சுற்றிச் சுற்றி
வருமென் கால்களில் மிதியுண்டு கிடக்கும் நானை,
நீ வீசியெறிவதை நக்கி தின்னுமென் வேகம்
உன் திருப்திக்கு உத்திரவாதமளிப்பதாயிருப்பதை,
எல்லாவற்றையும்.
நக்கி தின்னும் வேளையில் ஓங்கி வயிற்றிலுதைபட்டு
ஊளையிட்டு இறைஞ்சி நிற்குமென் பசிபார்வையில்,
என் மழுங்கல்தனத்தை உறுதி செய்து
கடந்து போவதுன் வழக்கம்.

ஆ.

உன்னை நான் பார்பதென்பது
எப்போதும் எச்சில் ஒழுகும் உன் வாயை
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறேன்.
எல்லாவற்றையும் குரோதமுடன் நோக்கும்
உன் நிலையற்ற பார்வையை,
அருவத்தை குதறும் உன் குரைப்பை,
எதிர்படுமெல்லாவற்றிலும் மோந்து பார்த்துத்
தலைக்கேறித் ததும்பும் வெறியைச்
சேர்பிக்கத் தோதான உயிர் தேடி
ஓட்டமும் நடையுமாய்த் தொடரும் உன் அலைச்சலை,
அனைத்தையும்.
பாதுகாப்பான தொலைவு கடந்து வந்தபின்
உன்னை திரும்பி பார்பதென் வழக்கம்
பேச்சு மூச்சற்றுத் திகிலுடன்.

12.
முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.

13.
நமைச்சலெடுக்கும் குறிகள் மூணு
கூட இருக்கும் தெம்பில் குறிநீட்டி
எல்லை மீறுபவனுக்கெதிராய்
எதுவுஞ் செய்ய இயலாமல்
குறியைச் சுருட்டிக் கொண்டவனின்
கையாலாகாத்தனம்
அர்த்தமற்ற குத்தலுடன் குற்றபடுத்தும் உன்னை.
நாங்கள் சுமத்திய எங்கள் அகோரங்களை
அறியவும் அனுமதிக்கபடாமல்
நீட்டியவனுக்கும் சுருட்டியவனுக்குமிடையே
குறுகிக் கிடக்கிறாய் நீ.
முலையும் யோனியுமாய்
வெறும்
முலையும் யோனியுமேயாய்.

14.
அக்கா குருவியின் மெல்லிய குரல் லயமும்
சிறு சிறு மலர்களின் மௌனச் சுகமும்
எனக்கும்தான் பிடித்திருக்கிறது.
பிறகெதற்கு இந்த ஒப்பாரியும் கூப்பாடும்
என்கிறாயா?

தேவைகள் சமைத்த என் குரலைச் சலிக்காது
சற்றே பொறு நண்பனே,
என் காதலி உன்னையும்
உன் காதலி என்னையும்
தழுவி முத்தமிட எந்த தடையுமில்லாமற்பொகும்
உன்னதப் பொழுதுவரை

15.
தலைவாசலுக்கருகில் படுத்துகொண்டு
முகம் திருப்பி முதுகு கடித்து
அரிப்புக்கு பதில் சொல்ல
முயற்சித்துக் கொண்டிருக்கிறது
அது எப்போதும்.

சொறிந்து கொள்ளக் கைகளின்றி
அதுபடும் அவஸ்தை புரிந்தாலும்
என் கைகளை இரவல் கொடுக்க முடியாது
ஒரு போதும்.

வேதனையுடன் கழிக்கவென விதிக்கபட்ட
அதன் எஞ்சிய வாழ்வு குறித்து
அனுதாபம் நிறைய இருந்தாலும்
எதுவும் செய்யக் கூடவில்லை
இந்த இடத்தையும் அதற்கில்லையென
மறுக்கும் ஒற்றைக்கல்லை
இதுவரை வீசாமலிருப்பதை தவிர.

16.
அலையடித்து நுரைகக்கும் கரையை
மிகுந்த பிரயாசையுடன் கடந்து செல்லுமென்
கைகளில் புராதனத்தின் கிழிசல் மிக்கவொரு வலை.
ஆழங்களில் வீசி காத்திருந்து மீட்டெடுக்கையில்
மீன்களை வழிய விட்டுவிட்டுக்
கடற்தாவரங்களோடு கெக்கலிட்டுச் சிரிக்கிறது
அது அநேக நேரங்களில்.
பெருமீன் பிடிக்க லாயக்கற்றுக் கிழியுமிதைப்
புதுப்பிக்கும்வரை
திருப்தி கொள்ள வேண்டியதாயிருக்கிறது
குறுமீன்களோடு.

கிழிசல் வலையைப் பலவீனத்தோளில்
போட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும்
வரச் செய்வதாயிருக்கிறது கடலின் அழைப்பு.
விடாப்பிடியான தாகத்துடன் விரித்துகொண்டேயிருக்கிறேன்
மீன்களுக்கான வலையில்
நானே விழுந்து கிடப்பதை அறிந்தும்
அறியாதவனாய்.

17.
வருடிக் கொடுப்பதான பாவனை செய்யவல்ல
உன் வார்த்தைகளை மூலதனமாக்கிப்
பெற்றது உனதிந்த ஸ்தானம்.
கேள்விகளற்றுத் தலையாட்டலுடன் தொடர்ந்த
இத்தூரத்தின் முடிவில் மிச்சமாகியிருப்பது
உனக்குன் ஸ்தானமும்
எனக்குன் வார்த்தைகளும்.

ஸ்தானம் கொடுப்பது நிறைய
தனம் தானியம் அதிகாரம் கீர்த்தி என.
வார்த்தைகள் கொடுத்தது ஒன்று
நீண்ட மயக்கம்.

ஒரு நீர்கயிறாய் வலியின்றி பிணைத்திருக்கும்
உன் வார்த்தைகளிலிருந்து மீள
வேறென்ன வழி மீந்திருக்கிறது சொல்!
கனவு ததும்பும் உன் விழிகள் ஒளிர
பரிவு சுமந்துவரும் அவ்வார்த்தைகள் புறப்படும்
உனதந்த குரல்வளையை குதறுவதை தவிர.

18
அ.

கான் தள்ளும் கறுப்பு வளையல்காரிகளின்
கைகளில் வந்தாவது
சரியாய் இருக்குமா?

கிழிசல் உடை பரட்டைத்தலை
சக்கிலிய வீட்டு பிள்ளைகளைக்
குறிவைத்துத் துரத்தியடித்தே பழக்கப்பட்ட
வாத்திச்சிகளின் கைப்பிரம்பும்,

காக்கிக் குறிகள் ஒரு அபலையை
வெறிதீரக் குதறத் தோதாய்
செம்பருத்திப் படம் பார்க்கப் போன
பொறுப்பான பொம்பளப் போலீஸின் லத்தியும்.

ஆ.

பிரம்புகளும் லத்திகளும்
மொத்தமாய் எரியுண்ட
சாம்பல் மேட்டை நோக்கியே
துவக்க வேண்டியிருக்கிறது
இந்த பயணத்தின் முதல் அடியை.

19.
மூச்சிரைத்து நுரைதள்ள
வெகுதூரம் வந்துவிட்டேன் உன்னை தொடர்ந்து.
இன்னுமெவ்வளவு தூரம் போக்கு காட்டி
இழுத்து போக உத்தேசித்திருக்கிறாய்?
அண்டி தெறிக்க குலைக்குமிவை
மேலே விழுந்து குதறும் நிமிடமும்
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்
திரும்பலை குறித்து யோசித்தாயிற்று பலமுறை.
கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த
கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு
என் விரைகளை நசுக்க.

20.
மௌனத்தின் அழுகையாய் உறுமியும்
வெறிக்கூத்தின் ஒலிபெயர்பாய் பறையும்
திகில் மந்திர புதிர்புதை மொழியில் உடுக்கையுமொலிக்கும்
மறைவெளி மண்டலங்களிலொன்றில்
பட்டைசாராயமும் பனங்கள்ளும்
மாந்திச் சிவந்த விழிகளுடன்
பன்னிக்கறியின் மெதனை படிந்த கைகளில்
கொடுவாளுடன் எதிர்பட்டானவன்.

கொடுவாளைக் கொண்டு மேனியை அடிக்கடி
அலுப்புடனும் கடுப்புடனும் வழித்துக் கொண்டிருந்தவன்
“ஓய்ந்து கொண்டிருக்கிறேன்
வழி நெடுக மேலே விசிறியடிக்கும்
சைவ அசைவ பீக்களை வழித்து வழித்தே”
யென்ற புகாருடன் அறிமுகப்படுத்திகொண்டான்
என் தொல்குடித் தெய்வமென்று தன்னை.
தெண்டனிட்டு வணங்கியெழுந்த போது
எனதேயான தன்முகம் மலர
வேண்டுவன கேளென்றான்
பூப்பறித்து விளையாடுவதாய் எம் தலையறுத்தாடும்
மெஜாரிட்டி கைகளில் சாதுவானவொன்று
பின் மெல்ல அறிவிக்கும்
எரிச்சலூட்டுவதாக
எங்கள் தலையின் எந்தப் பாகம் இருந்ததென்பதை
குறித்து நடத்தலாமிப்பொ
பொதுவிவாத மொன்றென்று.

தொல்குடித்தலைவா! வெட்டத் தளிர்க்கும் மரம் மாதிரி
எங்கள் மைனாரிட்டித் தலைகளும்
கொப்படித்துத் தளிர்க்க வேணுமென்றேன்.
பரிதாபமாய் பார்த்தவன் வேறென்னவென்றான்
அவ்வண்ணமே கூட்டமாய் வந்தவர்கள்
கிழிக்க முடியாவகையில் எம்குலப் பெண்களின் குறிகளை
உலோகக் குறிகளாய் மாற்றிதரவேணும்
முடிந்தால் கவர்சியான தங்கத்திலென்றேன்
அரண்டுபோனவன்
தன்னால் தரமுடிவதிதுதானென்று
பீ வழித்துக் கொண்டிருந்த கொடுவாளை
கூர்தீட்டிக் கையில் தந்து
ஊளையிட்டுப் போனானொரு காட்டுமிருகம் போல.



April 18th, 2007

மஜீத் - கவிதைகள்



[மஜீத் அக்கரைப்பற்றில் வாழ்பவர். மூன்று கவிதை தொகுப்புகள் (ஏறுவெயில், மூன்றாவது மனிதன் பதிப்பகம்/ வாழ்வின் மீதான எளிய பாடல்கள், விடியல் பதிப்பகம்/ ஒரு இலையின் மரணம், பெருவெளி பதிப்பகம்) ஒரு புனைபிரதி (கதை ஆண்டி, பெருவெளி பதிப்பகம்) தவிந்ந்து ‘வடிவங்களை மீறிய கட்டுடைப்பு’ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் (சுள்ளிக்காடும் செம்பொடையனும், அடையாளம்). ஈழத்துக் கவிதையின் பரப்பை விசாலித்து ஆழப்படுத்திய 90களுக்கு பிந்தைய எழுத்துச் செயற்பாட்டாளர் மஜீத். இவரது கவிதைகள் பற்றி எழுதும் றியாஸ் குரானா ‘மஜீதின் கவிதைகள் செப்பனிட்டு செய்யப் பட்ட உற்பத்திகள் அல்ல மாறாக கவிதையை உயிர்ப்பிக்க முனைபவை’ என்கிறார். முஸ்லிம் தேசிய இலக்கியம்-அழகியல், பின்-நவீன தேசியம் எனப் பல விவாதங்களை முன்வைத்த ‘பெருவெளி‘ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருத்தர்.]

காகங்கள் பூக்கும் தென்னை

என்னை சிலுவையில் அறை
கைகளை வெட்டி
கால்களை வெட்டி
தலையை பேத்து
உரியனாய்
வானத்தில் கட்டித் தூக்கு

என்னிலுள்ள
ஒவ்வொரு ஓட்டைகளுக்குள்ளாலும்
சங்கிலியிட்டுக் கோர்த்து
கட்டித்தூக்கு

ஓலைப்பெட்டியுள் அடை வை
நசல் கோழியுடன் என்னையும்
கூந்தல் கட்டி
சொத்தையில் நீரெறிந்து விரட்டு

அன்றி
கவணைக்குள் கட்டிப் போடு
புல்லும் வைக்கோலுமிடு
தவிடிட்டு மலங்கழிப்பதை தடு

அசைபோட கயிற்றை நுழை
அல்லது இறுக்கு
லாடன் கட்டு
மூக்கணம் குத்து
முதுகில் ரத்தி வை
சூடு பறந்த வாழ்க்கையை
குலைதள்ளிய குறையில் கொத்தி சரித்திடு
என்னை

தலையை கொத்தி மூளை குடி
வறுத்துண்ணு
விரும்பின் எலும்புகளையெல்லாம்
சேர்த்து சூப்பு காய்ச்சலாம்
பின்னிரவில் நிலாப்பார்த்திட்டே
சொட்டு சொட்டாய் குடித்து ரசம் தட்டு
உன் விருப்பத்திற்கேற்பவே

மொத்தத்திலிது ஈழமில்லை
சரிகாணின் பிணங்கள் கண்டதும்
காகங்கள் பூக்கும் தென்னை
*

(……)

நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது
யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?

முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடுங்கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா
அல்லது
யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?

சத்தியமாக நான் சொல்வதை நீ கேள்
என் மனதில் பெரும் பதட்டம்
என் உடலில் நீண்ட நடுக்கம்
எல்லாவற்றிற்கும்
எனது கண்களே சாட்சி
எல்லாவற்றிற்கும்
எனது செவிகளே சாட்சி
இவைகள் நடந்தே ஆகின

நான் சொட்டும் தீத்திரவம்

உச்சந்தலையில்
நிமிரும் மயிர்கள்
தனித்தனியே எரியும்
படபடத்துயர்ந்து கொழுந்து விட்டும்
குருடாயும்

குடற்பாதையில் வழிந்தோடி
என் அடியில் உறையும் தீத்திரவம்
கால் விரல் வரை விரிந்து
ஊத ஊத எரிவேன்
கலங்கள் நரம்புக் கணுக்கள்
கழன்று ஓசையுடன் எரியும் பொறி தெறிக்க

மூளையின் கால் நீளும்
உடம்பெங்கும் சென்று வரும்
உனர்வுச் சுவாலையின் நிழலில் அமரும்
காமத்தின் தோலொன்றை உரித்துப் போர்த்தும்

விரல்கள் சுருண்டு
உள்ளங்கையை துளைக்கும்
அரை வேக்காட்டு எலும்பெழுந்து
கடித்துறிஞ்ச வாய் தேடும்
சதையெங்கும் விழுதிறங்கும்
உன்னை என்னோடு இறுக்கிப் பிணைக்க
சுருண்டும் நிமிர்ந்தும்
பின்னியும் கோர்த்தும்
எனக்குள் தொடர்ந்திடும் இவை.

துளியாய் நீ சிறுத்தால்
நிரப்பும் என் தொப்புள்
வேர்வைக் கான்கள் நாக்கு நீட்டி
ரசம் தட்டி அருந்தும் உனை

நரம்பரைத்து பிழிந்து சாறூற்றி
எலும்பு உரைத்து குழம்பு பூசி
உணர்வுக் குளத்தில் நீராட்ட
அறிவாய் நீ ஆண்சுவை
நறுக்கிப் போட்ட நகமும் தவிக்கும்
இன்னேரம்…..

அவன் போராளியாக இருக்கக் கூடாது

என்னைப் போல் நிறத்திலும் உருவத்திலும்
ஒத்திராத அவனை இன்னும் நான்
அடையாளப் படுத்த முடியவில்லை
அந்தி இருளுக்குள் மிக வேகமாக வேகமாக
கடக்க நேர்ந்தது அவனை

மிகச் சுறுக்காகவும்
பயத்தின் ஜாக்கிரதையுடனும்
கடக்க நேர்ந்தது அந்த தெருவையும்

வீடு திரும்பும் அவசரத்தினாலும்
ராணுவத்தின் பயத்தினாலும்
அவனை
அடையாளங் காண முடியவில்லை

அவன் போராளியாக இருக்க கூடாது
யாரும் அவனை அடையாளங்காணவும் கூடாது
பயப்படுகிறேன்.

ராணுவ வதைமுகாமுக்குள் வதைபடுதல்
மிதித்து துவைபடுதல்
உச்சி வெயிலில் முட்டுக்காலில் கிடத்தல்
கட்டாயப் படுத்தி
மண்ணையும் அசுத்த நீரையும் குடித்தல்
இப்படி
கடுமையான வதைகளை விட
பெரிய பயம் அவன்
போராளியாக இருக்கக் கூடாது என்பதே
_____________________________________________________________
நன்றி : ‘வாழ்வின் மீதான எளிய பாடல்கள்’
மஜீத்
விடியல் பதிப்பகம்


FireStats iconPowered by FireStats