June 9th, 2007

நீத்தார் பாடல்



- கற்பகம் யசோதர

neethaar_paadal_kaya.jpg


‘…காடுகள், கட்டிடங்கள் நாடுகளின் சிறு சிறு நகரங்கள் கடந்து அதை அடைந்தேன். அந்த உனதென்ற நிலத்தில் தாய்க் கிராமத்தை கிராமத்துக் கிழவிகளை முதிய பாடல்களில் தாலாட்டின் கருவறைச் சூடு தேடி… காடுகள் கழனிகள் நீர்ப் பாசனங்கள் ஊடே வரலாற்றைத் தேடி… மனித சஞ்சாரமற்ற முடிவுறாத வெளிகளிலோ எலும்புகள் துருத்திற சமாதிகளும் ஒப்பாரி ஓலங்களையும் தவிர வேறெதுவுமில்லை@ ஒப்பாரியில் தம் தாலாட்டின் வசைமாரி பொழிகிற கிழவிகள் கண்களின் ஆழ் குழிகளுள் இருந்தோ வன்மம் கொலைவெறி கொண்டு துளைக்க.. தலைதெறிக்க ஓடினேன் - முடிவற்ற பாதையில்…’
–மகள்களில் ஒருத்தி கூறியது

i.
0அந்தரா, ரூபி, மித்தாலியா
தூரத்தில் என் பிள்ளைகள் கதறின

தூக்கிக் குறிபார்த்து, கல்லை
எறிய - கூடிருந்து சிதறி -
பறவைகள், கலைந்து.
(ஓ.. ஒரு நாயைப் போல கிடந்தாய்)

சேர்ட் பட்டன்கள்
அறுந்து விழுந்த
திறந்த நெஞ்ச மயிர்களில்
சிதறி இரத்த்தம்-
இன்னும் பிளந்தால்
நெஞ்சு வெடித்துக் கதறும்
என் பிள்ளைகள்
இருப்பார்கள்

ஏய், தூக்கிப் போடு ஓரமாய்
செத்த எலியைப் போடுவது போல

ஓலம் வலுக் கின்ற
துணைப் பெண்ணின்
தலை
மயிர் எங்கும் நோய் விரி-ந்து
-0-

மாசி 07, 2006

ii.
உன்னுடைய தசையின் சிறு துண்டு
ஆம்
உன்னுடைய தசையின் ஒரு சிறு துண்டு
இயக்க நாட்களில் ~ஓ.. அந்த முன்பொருபோது|
சமூகம் சொல்லிக் கொண்டிருந்த
இலட்சியங்களின் பொருட்டு,
ஆதிகால மனத்துடன்
சேர்ந்திருந்த நம்
இருப்பிடங்கள் வேண்டும்
என் தொடையிடையே புதைந்துள்ள
தொலை வனங்கள் வேண்டும் - பதறி
எப் புறமும் வீசுகின்ற
தலை மயிர்கள் வேண்டும்
எம் கால்களை நடத்திச் சென்ற
நம்பிக்கைகள் வேண்டும்:
தலையணையின் ஓரத்தே
நெருடலின்றிப் படுத்துறங்கும்
அருகாமை சுவாசத்தில்
தன் இருப்பிருத்தி,
இருதயத்தைப் போல
நொடி நொடியாய்த் துடித் திருக் க
உன் வாசநிறை துண்டொன்று..
உன் தசையின் சிறு துண்டம்@
துவக்குகளின் எசமான்களே
என் இணையின் சிறு தசைத் துண்டை
நாய்க்குப் போடும் எலும்பொன்றாக
சேர்ந்து கண்ட எம் கனவுகளின்
எச்சத்தை
அ-இயக்க நாட்களின் உலை பொசுக்க
கனவழிந்த வெறியோடு உலவும்
அவன் தசைக்கோள சிறு பகுதியை,
- ~உயிருடன்| எறியுங்கள்
எத்தனையோ நாளாக(ப்)
பவளமல்லிப் பந்தலின் கீழ்
நான் வெறி பிடித்து
முத்தமிட்ட
அவனினது சுந்தர உதடுகளோ
ஆலிங்கித்துக் களைத்திராச் சிறு தோளுகளோ
பிரிய மகளின் ஸ்பரிசம் தருகிற வாஞ்சைகொண்ட
- விழுந்த
என் இணையின்-
சின்னஞ் சிறு துண்டொன்றை…
0

iii.
வரலாற்றின் நெடிய வெளிகளில்
ஒரு பெயரற்று நான் கிடக்கிறேன்
கவிஞன்கள் தலைவன்கள்
யாருமா யில்லாமல்
அணிவகுப்பில் சீருடையின் கீழ் இணைகிற
~வீரனின்| தனித்துவமின்மையாய்
வெற்றுக் கடதாசிகளது ஆயுளாய்
காக்கி உடைகளுள்
போராளிகளுள் போராளியாய்… நகருகிற முகங்களி லொரு முகம்:
ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?
ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் என்னை அறிவீர்களா?

iஎ.
போர்க் காலம்
நாம் மறைந்திருந்த காடுகள் பாடின
எம்மைப் பக்குவப்படுத்தும்
செம் புத்தகங்களும்
இந்தா.. வந்துவிடும் எனும் புரட்சியும்!
அந்த இனிய.. இனிய நாளுகள்!

காலத்தின் புண்ணிய காலம்
வஞ்சிக்கப்பட்ட தொரு
தாயின் தொhடைகளுக்கிடையே
வாழ்வின் ஜீவன்-
வேண்டப்படாதவனாக—
மலைநாட்டின்
சவுந்தரியப் பரப்பில்
பாட்டனும் பாட்டனின் பாட்டனும்
வாழ்ந்தவென் மண்ணில்
பிறப்பைப் பாடுவார் அற்றுப்
பிறந்தேன்
தலைமுறைகளாய் உறிஞ்சப்பட்ட
எனது வேர்கள்@
லயங்களில் தாலாட்டும்
அம்மைகளின்
வீரமும் உரமும்…
என் கனவுகளின்
அடிப்படைப் புள்ளி
அந்த வாழ்விலிருந்து வந்தது–
கூடையைத்
தலையிலே சுமக்குமெம் பெண்களின்
சுமையில் இருந்து.
எம் அருவிகளும் வனப்பும்
வாழ்விற்கு முரணாக
சௌந்தர்யத்தோடு மின்ன-
ஊடறுத்து ஓடும் நதிகளின் ஊடே
தலைவர்களாலும் அதிகாரிகளாலும்
வஞ்சிக்கப்பட்ட நிலத்திலிருந்து,
வஞ்சிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து,
எல்லாவற்றையும் மாற்றிடும் வெறியோடு
நடந்தேன் நான்

எ.
1980-களில் பிறந்ததந்த சமத்துவக் கனவு@
ஆலமந்தா..
நம்முடைய இணைபு நிகழ்பெற

போர்க் காலத்தின் நெருக்குதல்களுள்ளும்
நம் சந்திப்பு நிகழ்ந்தது@
பெண்கள் அணியின் தலைவியாய் நீ

வால்கா நதியோரம் ஆரம்பித்த காலடி
பின் தொடர –
உன்னைத் தொடருதல் என்பது அர்த்தமிக்கதாய்-
இனிய, இனிய காலம்

உனதான கருவறையுள்
பாதுகாப்புடன்
நீந்தி வ(ளர்)ந்தன குழந்தைகள், ஓ..
கனவுகள் நொறுங்கிய பிந்தைய இரவில்
அறையுள் நிறைகிறது புலம்பல்:
காலத்தின் அங்கதமாய் ~துரோகி| ஆகிப்போன
- அப்பாவை நினைவு கொள்வீர்களா?
காலத்தின் அங்கதமாய் ~குடும்பத்து அணிகலன்| ஆன
- அம்மாவை அறிவீர்களா?

எi.
கனவழிந்த அவளின் வன்ம விழிகள்
கொலையுண்ட இணையின்
சதைத் துண்டைத் தேடி,
வெள்ளையன்கள் எரித்த கறுப்பனின் தாய்போல..
தலை மயிர்கள் தனியொன்றும்
கொலை செய்ய அலை-ந்து

கொடிய தொரு நாளில்
தேசத்தின் தெருக்கள் எங்கும்
புத்தகங்களைப் போட்டு எரித்தவர்கள்
“இதுகளப் படிச்சிற்றுத் தானியடா
கதைச்செண்டு திரிஞ்சிங்க” என்றவர்
- பற்றிய கதைகளைச் சொல்ல
அவரைக்; காணவில்லை@
அவளோ பேசுவதே யில்லை.
கருகும் புத்தகங்களுடைய செங் குருதியோ
கருஞ் சாம்பலாய்க் காற்றில்
புரட்சிக் கனவின் மீதாக
ஓ..
பேரிச்சம் பழங்கள் உங்கள் வீடு திரும்புதலை நினைவுகூருகின்றன
சீனத்துக் கதைகளோ பிறந்தநாள் பரிசுகளாய்த் தொடுகின்றன
வெருகலில் படுவான்கரையில் தேசத்து
வெப்ப நகரங்களில் சூட்டுக்குச் சாபவர்களை
நினைவுகூர நினைவு
கூர
திக்கின்றி வெறிக்கும்
அவளின் கண்ணீர்க் கறையால்
அழிந்தண்டே போகிறதோ
-பீரிடும் இரத்தத்தினை ஒத்த-
அன்போட மணம் ?

எii.
நான்
வரலாற்றின் முன்
தலை குனிந்துள்ளேன்@
00அவள் சென்ற அதே வழிகளே
எனக்கு முன்னாலும்
சிலரோ பெயர்களாகவே தங்கிவிடுகின்றனர்@
வரலாறோ
மழுங் கடித் தடித்து
காயடித்த மிருகம்
என் சார்ந்த
எல்லாவற்றிலும் அத்துமீறி
நிர்வாணப்படுத்தி
மகிழும் சமூகம்

இங்கே-
இப்படித்தான் கதவுகளை மூடினேன் (இப்படித்தான்)
மனிதர்களை வாசலோடு நிறுத்திச்
சாத்தி (இப்படித்தான்)
குந்தியிருக்கிற தனித்த அறையுள்
அலாவுதினீன் போத்தலுக்குள் அவன்
காற்றாக நுழைவது போல
என்னுடலினுள், வாயூடாக நுழைந்து
உள்ளறைகளுள்
கதவுகள் திற பட திற பட
சென்று கொண்டிருந்தேன் -
இறுதியில் எனதிடம்
ஓர் இடம் இருக்குமென்று.
கதவுகள் திறந்து திறந்து
வழி விட
போய்க் கொண்டே இருந்தேன்@
புறம்வலம் திரும்பிற போதெல்லாம்
சுவர்கள் தன்னிச்சையில்
அப்பரின்
மலை நாட்டுப் பாடல்களைப் பாடி
அழுகின்றன,
மதிப்பற்ற பொருள் ஒவ்வொன்றும்
அம்மாவின் ஆதி இயல்பை
இறைஞ்சுகின்றன

புலனடக்கி உறங்கிப் போய்
அறுத்த மண்டையை
கையில் பிடித்தபடி ஓடும்
இராக் காலக் கனவுகளில்
திடுக்குற்றுப் முழித்து
சாமத்தை வெறிக்கிறேன்@
அதுவோ
தொலைந்த அப்பாவைத் தேடி அலைகிறது
துர்நினைவுகளுடன் நித்திரையற்று அலைந்து
நனவற்று நடந்து, அறைக் கதவு திறந்து,
தொடர்மாடிகளின் ஹோல் வே-க்களில்
நடை நடந்து நடந்து (முடிந்து)
படியிறங்கித் தெரு விறங்கி
நித்திரை குலைந்த அப்பா
வரலாற்றுள்த் தொலைகிறார்
நான் தேடித் தேடி நடக்கிறேன்
ஒவ்வொரு வீடாய், தட்டித் தட்டி
அப்பா எங்கே, அப்பா எங்கே
மீண்டும் மீண்டும்
கதவுகள் திறந்து திறந்து
மூட-
அவரைத்
தேடி ஓடி நனவிற்கு மீட்க முன்னே-
தோட்டாக்கள் பாய
தெருவில் நாயைப் போல
அவர் விழுகிறார்
000……………………………….
உச்சஸ்தாயிக்கு
மலை நாட்டுப் பாடல்கள்
எழுகின்றன
கால்கள் பின் நகர
உள்ளுடல் சுவரில் மோதி
நிலத்தில் விழுகிறேன்@ சூழவும் இருள்.
அச் சூனியத்துள்
உருவங்களற்று இருந்து
~துரோகிகள்| பேசுகிறார்கள்
-கேள், கேள்.
மனநல விடுதியில்
சன்னல்கள்
திறந்து திறந்து மூட
பேச்சு வலுக்கிறது-
சிங்களக் கிராமங்களில்
ரயர்களுடன் கருகிய
இளைஞர்களின் நிணம் கருகும் மணம்
இரத்தத்தின் நெடி
அவர்களி லிருந்து வீசுகிறது
(எல்லோருடைய இரத்தமும்
கருமை அடரும் சிவப்புத்தானே?)
சகலத்தையும் மறக்க
இறுக்க மூடி
பிணம் நாறும் அறையுள்
உறங்கும் என்னுள்:
பதின்மங்களில்
சொகுசான குழந்தைகள்
கட்டிலில் தம் துணைகளைப்
புணர்கிறபோது
தட்டி எழுப்பி எழுப்பி,
இரத்தம் பீரிட தெருவில் விழுந்த
உருவத்தின் இன்மை - அலறுகின்றது
பட்சத்துடன் வாழ்வதற்குரிய தேகத்தின் அணுக்கள்
உடைந்து கொட்-டுண்-ணு-கின்றன
மன அவசங்களுடன்
அங்கஹீனங்களுடன்
கால்களற்ற உடலுறவுகள்,
கொலையுண்டவர்களின் நாவுகளற்ற
இணைகளின் மொழியற்றுப் போன அந்நியம்,
நோய் முற்றிப் போய்
என் நா வறுக்க நிற்கிறது

பிறழ் குரல்களிடமிருந்து தப்ப
நாய்கள் கொல்லப்பட்டுக் கிடக்கிற
உட் தெருக்களெங்கும்-
உடலின் துணி களைப்
பிய்த்தெறிந் தெறிந்து
பழியின் குற்றவுணர்ச்சியூட்டற்
பிடிகளைத் தள்ளி,
நான் -
கனவுகளாலும் நினைவுகளாலும் ஓடுகிறேன்
என் சிறுவத்தைப் பாதுகாக்க

எiii.
விதி:
போரிட்ட கைகளோ ஓய்வதில்லை@
ஆயுத விசைகளும் சளைத்ததில்லை
அன்பே, இப்படித்தான் பிந்தைய காலம்
மாறிற்று
எம் அற்புதக் கனவுகளை
நாமே சாகடித்தோம்

~அவனுடன்| நிற்கமுடியாதபோது
வாழ்வை ஓட்ட
லோகாயத சிறைப் பிடிப்புள்
நீ ~எவனுடன்| நிற்கப் போனாய்
உன் சமரசத்தைத் தூண்டியவன் எவன்@
அவன் செய்ததில்லையா சமரசம்? எச் சமரசமும்?

ஓ..
வென்றவனின் வரலாற்றில்
நிலத்தில் எண்களே கூடிக் கொண்டிருக்கிற
~துயிலும் இல்லங்களுள|; இருந்து
இளங் குறிகள் யோனிகள்
போர் செய்ய மறுக் கின்ற
பெரு மோலம் எழுகிறது
கணணி; யுகத்துள்
அதைக் கண்டிராத
குக்கிராமங்களில்
தலைமுறைகளின் ஓலம்
வதைகளால் இறுகிய
இராணுவ முகாம்களுள் இருந்தோ
மனம் பிறழும் ஓலம்

iஒ.
நான் கேட்கிறேன் அதன் ஓலத்தை.
சுடலையின் அமைதியை இடித்து
என் பிள்ளைகள் கதறுகின்றன
அந்தரா, ரூபி, மித்தாலியா
இந்தப் பேரண்டத்தில் உங்களுக்கென
மரணத்தை விட்டுச் செல்கிறேன்@
மரணத்தின் வெறுப்பை,
துரோகத்தை,
அசமத்தை..
உங்களிடத்தே
ஒரு வடுவாக விட்டுச் செல்கிறேன்

என்றேனும்
துயிலுமில்லங்களில் அனுமதியற்ற
உமது தாயின்ஃதகப்பனின் வரலாற்றை-த்
தெருவிலே
இயக்குவோன் அற்ற பல
நாடோடிப் பாடல்களில் தேடுவீர்களா? (தேடக் கூடுமா?)

பக்கங்களைத் திருப்பித் திருப்பி
பாடத்திற்காய்ச் சப்பும் புத்தகக் கட்டுக்களுள்
இல்லாத எம் பெயர்களைத் தேடுவீர்களா?
புத்தகங்களைக் கிழித்த்து
தெருவெங்கும் இறைத்த்து
தீயிட்டுக் கொளுத்திய
சந்தர்ப்பவாதங்களின் வெற்றிக் குதியாடலில்
வலுவற்றதொரு பக்கத்தை
நீங்கள் ம(றஃ)றுக்காதிருப்பீர்களா..

ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?
ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் எம்மை அறிவீர்களா?
~

(தேசத்தின் தெருக்களிற் கொல்லப்பட்டுக் கிடக்கிற ~~முன்னாள்|| (ஆண்ஃபெண்) போராளிகளின் பிள்ளைகள்ஃகுடும்பங்கள் நினைவுகளிற்கு..)

0இப் பிள்ளைகளது பெயர்கள் வேறு படலாம்…
00சிவரமணி
000கேட்ட எந்ததொரு ஒப்பாரியையும் இவ்விடத்தில் நெஞ்சிலடித்துப் பாடலாம்

—————————————————-
மார்கழி 2005 – சித்தரை 2006



June 9th, 2007

ஆன்மாவின் சகோதரிக்கு…..



- கற்பகம் யசோதர

ka_yaso1.jpg

நீயின்றி ஒருநாள்
இத் தெருக்களைக் கடக்கையில்
என் பால்யத்தின் வாசனைகளில் மூழ்கினேன் _________
நிதானமற்றவளாய் விசரியாய்
காலமெங்கும் அதிரும்
நீ என் ஆன்மாவின் சகோதரி
நான் உன் ஆன்மாவின் சகோதரி
எங்களது தோழர்கள் தொடர்ச்சியற்றுப் போனார்கள்
பள்ளிகளின் சுவர்களில்
போரின் நினைவுகளது கண்கள் வெறிக்க
சிறு பராயத்து ‘அவர்கள்’
வரலாற்றில்
பெயர்களற்றுப் போனார்கள்
நான் வன்மத்துடன் உச்சரித்தேன்
அதனது பெயர்களை -
மிக இளமையில் அறிந்தேன்
அது கொண்டாடுவோரது வஞ்சகங்களை.
உனது கரங்களைப் பிடித்து
ஓடிச் செல்வேன்
குழந்தைகள் தம் தாயின் ஆதிக் குகையின்
கிழியல்களைக் கொண்டு ஓடிய
அதிகாரக் குன்றுகள் நோக்கி;
அவற்றினுள் புதைக்கப்பட்ட கதைகள்
அதிருகின்றன எம் மேல்.
நடுங்குகின்ற
என் கைகளை விடுவித்த
வஞ்சிக்கப்பட்ட குரலில்
உன் பாடல்களைக் கேட்கையில்
அதிலிருந்த (என்) இழப்பில்
மனம் சிணுங்கி
ஒரு காலம் உன்னில்
இரகசிய வெறுப்பும் வன்மமும் உள்ளிட
பிறகோ
சமனாய் பேரன்பும் ஆசையும் பீரிட
அருகருகே பயணிக்கும் போழ்துகளில்
வேறு வழியற்று
நான் புணரவும் விழைந்த
__________!
சொற்களெங்கும் தெறிக்கின்ற நீ
ஆதிப் பெண்;
ஏவாள்; சக்தி.
நீ இரையிட்டும் புணர்ந்தும்
உருவாக்கிய பிள்ளைகள்
குன்றுக்கடியில்
ஒடித்துப் போட்டது
உன்(எ)ன்னைத்தான்
என்(உ)ன்னைத்தான்
அதிகாரம் வன்கிழித்ததில்
கையில் வந்த உன் ஜோனிச் சதையோடு
அதில் இரத்த்த மின்னும் உறையாது
உன் கரம் இழுத்து ஓடிய போது, ஒரு தெருவிலே
நீ மறைந்து போக, கையிலிருந்தது
உன் உதடென்று கண்டு
மூர்க்க மிகுந்து முத்தமிட்டேன்;
அதன் இரத்தம் உறிஞ்சி உறிஞ்சி ருசி கண்டு.
தாம் கடந்து வந்த கருவழிப்புகளில்
வேசிகளின் உடல்கள் சென்று வருகிற காயங்கள் பற்றி
- யாருக்குமென்ன?
விசரிகளின் பிள்ளைகளது தகப்பன்களது பெயர்கள்
எக்காளமிட்டுச் சிரிக்க
உள்ளே
உன் *இன்பத்தின் சதையிழந்து
கல்லெறிய தகுதியற்றவன்களால்
எழுதப்பட்டோ படாமலோ,
ஆனால் மழுங்கடிக்கப்பட்டு -
வரலாற்றில் மறைந்தாய்.
வணங்கப்படும் தாயே
கள்ள வேசையே
நடுச்சாமத்தில்
உன் கதவுகளைத் தேடி வருவார்களெனில்
அவரிடம் சொல்லு
அதிருகின்ற உன் சொற்களால்
நிதானமற்ற கூச்சல்களால்
பிறழ்வுற்ற மொழியால்:
எதையும் முழுமையாய் சொல்ல முடியவில்லை
எம்மிடமும் பெயர்கள் இல்லை
சொல்லப்படாதிருக்கின்றன ஏனைய பிற
அப்புறம்
நான் _____________!
உன் ஆன்மாவின் சகோதரி
முடிவுறாதவள்
தாயும் வேசையும்
~
மே, 2007



April 25th, 2007

கற்பகம்.யசோதர கவிதைகள்



கற்பகம் யசோதரவின் கவிதைகள் பற்றி எழுதும் போது மாத்திரமே எமது வார்த்தைகளின் போதாமையினையும் அபத்தங்களையும் போலிப்பாவனைகளையும் உணர முடிகிறது. அவரது கவிதைகள் பற்றி எதை எழுதி விட முடியும்? மூன்றாவது மனிதன் இதழில் இரண்டு கவிதைகள் பிரசுரமாயிருக்கின்றன. ‘நீத்தார் பாடல்’ மூன்றாவது மனிதனில் வந்த முக்கியமான கவிதை. மூன்றாவது மனிதன் தவிர்ந்து வலைப்பதிவுகளில் மாத்திரமே கற்பகம்.யசோதர எழுதுவதைக் காணமுடிகிறது. சத்தியக் கடதாசி, ஊடறு, மற்றவர்கள் ஆகிய வலைப்பதிவுகளிலிருந்து எடுத்த கவிதைகள் இவை.

யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…

1
இன்னுமொரு கொலை நாள்!
படுவான்கரைகளில் எக்ஸ் - எக்ஸ் அம்மான்
தன் அண்ணரைத் தேடி அலைகிறார்
அண்ணன் பெம்மானை…

அங்குமிங்குமென
அண்ணனும் தம்பியும்
தம் எதிரியரைத் தேடித் திரிகிறார்
நான் என்னைத் தேடுகிறேன்
கொலைகள் எனது கனவை அழித்தன
கொலைகள் எனது இரவை அழித்தன
என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
அவர்கள் என்னை அழிக்கு முன்
புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும்
எனது வீட்டில் தீக்கிரையாகின
என் கைகளின் இரத்தக் கறை
தீ மூட்டிய
உன் கண்ணீரால் கரைந்து அழிய
அதை உன்னிடம் தந்திருந்தேன்
ஏனோ அது அழியவில்லை
அதிகாரத்தைப் பழி சொல்லி
வெறித்தவுன் நேரிய பார்வை
வீழ்த்தப்பட்ட என்னிடம் வருத்தம் தருகிறது

நம்பு!
நான் எதுவும் அறியேன்,
வீடு திரும்பிய ஓர் அதிகாலையில்
படலையில்
என்னைச் சுட்டுச் சென்றது கூட
‘அவரா’ ‘இவரா’ தெரியாது
என் இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
உடலிற் பொட்டுத் துணியோ
எனறோ முத்தமிடப்பட்டதான அதிர்வுகளோ இன்றி
யாரும் ஏன் முத்தமிடவில்லை?
அதன் வலி பகர
முகம் அற்ற
ராணுவம் வெட்டிப் போட்ட
முண்டங்களில்
தெகியோவிற்ற, தெரணியகலை
இரப்பர் தோட்டங்களில்
அல்லைப்பிட்டியில்
பத்திரிகை அலுவலகங்கள் வரை
வீழும் உடல்கள் முன்
நீ தலையிலடித் தடித் தழுவது
பிரயோகிக்கப்படாத குறிகளுக்காக

நீலம் பாரித்து வரண்டிரா
சாவுக்கு முந்தைய காலத்து
அழகிய உதடுகளால்
என்றுமே அறியப்படா ஆசை முத்தத்திற்காக..

ஓர் இனிய முத்தம் - அது இவ்
உதட்டுத் தசைகளில் எப்படி உணரும்?

நம்பு
வாளால் வெட்டப்பட்டபோது
துவக்கால் சுடப்பட்டபோது
கொட்டான்களால் தாக்கப்பட்டபோது
எனது இதயம் அழுததும் அதற்காகவே!
எவருமே கண்டிரா
எனது நிர்வாணப்பட்ட உடல்
ஓர் பிரச்சாரக் கருவியாகி
பிரசுரிக்கப்பட்ட போதிலும்
நான் அழுதது அதற்கே…
போகும் திசையறியாப் போரின் கண்ணிகளுள்
எதையும் சொல்ல வாய்ப்பின்றிப் போய்
கழுகு தின்னத் தீனியாக
இந்த வீதியில் போட்டுக் கிடப்பவன்
எப்படி நானாக முடியும்?

சைக்கிளை மிதித்துக் கொண்டு
பிரதேசத்தின் வயல் வெளிகளில்
இன்னுமொரு கொலைநாளில்
ஓர் இன்னுமொரு கொலைநாளில்
உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி
வதைமுகாம்கள்
இராணுவ முகாம்கள்
சோதனைச் சாவடிகள் ஊடு
முகமூடி ‘யாரோ’
எதிர்ப்படும் நொடி வரையில்
இரண்டு சகாப்தங்களாய்
யாராலோ கொல்லப்படுவதற்காகவே
காலங்கள் சுழலும்
இத் தெருக்களில்
போய்க் கொண்டிருக்கிறேன்

(வைகாசி 2006)

2
ஒவ்வொரு இரவும் பகலும் தனிமையை வாழ்தல்;
பெரும்பான்மை கூக்குரல்கள் ஒலிக்க ஒலிக்க
தொண்டையிருந்து வரும் சிறிய ஒலி
ஆற்றாமையோடு அடங்க
பேசுகிறவர்களாக நீங்களே இருப்பீர்கள்
சகல அதிகாரங்களும் உரியவர் நீங்கள்
உங்களை மீறிப் பேசுதல்
எங்கோ
ஒளித்துக் கொண்டும்
உள்ளே சுருங்கிக் கொண்டுமே சாத்தியம்
வெளி விரும்பும்
எல்லைகள் கொண்டாடாத ஒன்று
சுருங்கிச் சுருங்கி
எழுப்பும் தன் ஒலி
அதை மறுக்கும் உம் ஒலி
இக் குறிப்பில்
தன்னை நுழைக்க விரும்பும் நான் போல
எம்மைக் குறித்த எல்லாவற்றிலும்
ஓட்டை இருக்கென்பதால்
வரவேற்கிறோம் என்ற விச்ராந்தியுடன்
அதிகாரத்தை நுழைத்து
கொலைகளாயும்
ஒரு வயதுக் குழந்தையின்
மூத்திரப் போக்கியுள் நுழைவதாயும்
நெஞ்சுள் வலி பிளக்கும்
ஒரு காட்சி மாற
மறு காட்சி
கைகளில் ஒடுக்கப்பட்டவனி/ ளின் மண்டையுடன்
பற்கள் ஒளிரத் தெய்வங்கள் எழுந்தருளுகிறீர்கள்
சிலவேளை
அது அந்த ஒடுக்கப்பட்டவனின் கரத்தில்
நீங்களாக அல்லது நானாக
உருமாறுகையிலோ
உடைப்பெடுக்கத் தயாராகும்
கேள்விகளுடன்
மூளை சிதறுகிறது
அவனா இவனா
எந்தப் பக்கம்
நிகழ்பெறும் அநீதியை
ஏற்பதா விடுவதா
உடன்படுவதா எதிர்ப்பதா
கேள்விகள்…
அப்பால்
தேசத்தில் தலைவர்களோ
தமது சுந்தரமான சிரிப்புடன்
மொழுமொழுகும்
தம் குறும்புமிகு குழந்தையை
கொஞ்சுகிறார்கள்;
அவர்கள் கட்டளைக்கு ஆயத்தமாய்
வரிசையில் நிற்கின்றனர்
ஆயுதங்கள் தாங்கி சிறிய, மிகவும் சிறிய
தேசத்தின் பிள்ளைகள்.
ஒடுக்கியவனையும் ஒடுக்கப்பட்டவனையும்
அடையாளம் தெரியாத தெருக்களில்
நாங்களும் நீங்களும் திரிகிறோம்;
சனங்களாக
அங்கிருந்துதித்த
அறிவுஜீவிகளாக
சந்தர்ப்பவாதிகளாக
“துரோகி”களாக
மேலும்
வரலாற்றிற் பதியப் பெயர்கள் அற்ற
உயிர்களாக…
எமது கைகளில் “இழந்த” “கொன்ற”
எல்லாவற்றினதும் கதை கூறும்
இறைச்சித் துண்டு
பிரியமானவர்களின் ஒரே ஓர் எச்சமாய்.
பதுக்கப்பட்டு
கடந்த வதைகளின் தடங் காட்ட
வன்மங் கொண்டு நிற்கிறது
யுத்த காலம்!
இப்படித்தான் தன் துணையிழந்து
இங்கே ஒரு பெட்டை நாய்
தனது குட்டிகளை வளர்க்க
உங்கள் விசர் தீர்க்க
தனது குறியை
“இருக்கிறதும் கிழிய” விட்டபோது
அத்
தீராக் கிடங்கில் விழுந்து
எழுந்த
ஒருத்தன் சுட்டான்
எக்களிப்புடன்.
வெட்கங் கெட்டவன்கள்
ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்
தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்:
“தெரு நாய் கொலை!“
ஆனால் அருகிருந்து கதறிய பிள்ளைகள் அழுதது
திசையறியா ஓர் எதிர்காலத்தின் மீதாக.
அவை அழுதன, அழுதன, தொடர்ந்து அழுதன!
தெரு நாய்கள் கூடி
இரவுகளில் உங்கள் கனவுகளில்
தொலை தூரத்தில்
ஒரு பெண் படு துக்கத்தில் விசும்பி விசும்பிப் பின் அது
வெடித்து அழுகையானது போன்ற சங்கிலிக் குரைப்பு
நிம்மதி குலைத்து
கிராமங்களில் ஒலித்து
இராவில் பெருகும் தெரு நாய்கள் துரத்த
நிம்மதி குலைந்து ஓடும் உங்களைக் கவ்வ
சிதறும் விச விந்துக்கள் போல
குருதிக் சொட்டுக்கள் சிதறச் சிதற
விழுந்தெழும்பி ஓடும்
உங்கள் சதை குதறித் தின்ன
வேட்டைப் பற்கள்
தேச மெங்கும்
கூர் மின்னி

ஆனி 2006

3
கருணையின் திருவுருவாய்ப் பெரும்பான்மை இருப்பதாலேயே
“நான் x நீ” ஐக் கடக்க முடியாது
பிரதிகளில் உன்னைச் சுட்டி
-என்னால் முடிந்தது!-
எக்காளமிடுகிறேன்
எனினும் நீயே கருணை
உன் பெரும்பான்மை நிம்மதியை
என் தரவுகள் குலைக்குமென
சராசரியிலிருந்து விலக்கி
மேய்ப்பனின் ஆடுகளுள் நொண்டிச் செல்லுகிற ஒன்றாய்
என்னைத் தனிமைப்படுத்தி முறியடிக்கிறாய்
நீ அறிய விரும்பிற ‘உண்மை’யின்
அளவை மீறும் தரவுகள்
உன் சகிப்பெல்லையைத் தாண்டுகிறபோது
பதறி
சந்தர்ப்பம் தகுந்து வார்த்தை ஆடும் “நீ” சொல்லுகிறாய்!
உணர்வுகள் கொப்பளிக்காத
குளிர்ந்த இதயம்
கொம்புகள் முளைத்த அறிவுஜீவிதத் தலை
குலத்தை அழிக்கும் கோடரிக் காம்பு!
கருணையின் திரு உருவே!
சிந்திப்பது எப்படித் தவறாகும்?
மண்டைகள்
உனக்கு ஆட்டுவதற்காய் உருவானவையா?
மூளையுள் முளைவிடும்
தனித்துவ எண்ணங்கள்
உணர்வுகள் மரத்து
உறைந்த குறிகளாய்
பழகிப் போய்
கேட்பாரற்று வரண்டு போன
உயிரின் ஆதாரங்களா?
புத்தி நேர்மையும்
உலகத்து ஒடுக்குதல்களை
எதிர்க்க முனை பார்வையும்
முற்றிலும் நஞ்சு என்று
என்/ நீர் குறித்துப் புரளி நீ கிளப்பிவிட்டாலும்
தன்னை மீறி ஆவியாகி
சித்ரவதைக் கூடங்களில்
கொடும் வதைகளில்
தற்கொலை செய்யக் கதறும்
கைதியின் ஆன்மாவுள்
வீதியில்
தாக்கப்பட்ட ஒரு மூன்றாமுலகப் பிள்ளையின்
கண்களில்
பொழியலாகும் அது…
உனது கருணை உனக்கே சொந்தம்
அது
உனது கண்களில் மட்டுமே வழியும்

ஆனி 2006

நான்

நான் கடவுளின் ஒரு பகுதி
அல்லது நான்தான் கடவுள்
அகண்ட தொடைகளுள்ளிருந்து
சிசுவை இழுத் தெடுக்க -
ஆக்குகிறவள் நான்.

பிஞ்சு அதன் கால்களை இழுத்து
சுவரில் மோது(கி)றபோது
அழிக்கிறவள் நான்
காலமெல்லாம் அகாலிக்க
போர்களும் எவரோ நிறுவியனவும்
தோற்கடிக்கையில் திருடும்
பொருளாக்கின என்னை
யார் யாரினதோ தோற்கடிப்புகளின்
நினைவூட்டுகை ஆனேன்.

பெண் குறி
சாத்தானின் வழி;
துர்க்குறி.
தொடைகள் அகண்டு கிடக்க
சட்டத்துடன் நுழைய
தேவியாய்,
தொடைகள் அகண்டு கிடக்க
விலை விசிறி நுழைய
மூலை முடுக்குகளில்
வேசையாய் வப்பாட்டியாய்,
தெருவோரம் நின்று
சிறிதளவு அன்பிற்காய்
மண்டியிட்டிருந்தவள் நான்.
இன்றோ-
நான் யார் யாரோ
நினைப்பிற்கும் “ஆட”ப் பிறக்காத்
தாடகை சிறாம்பி!
கடவுளின் ஒரு பகுதி;
அல்லது நானே கடவுள்.
இத் தற் பிரேமங்கள் குறித்து
எதுவும் பேசாதே -

என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது
என்னை என்னால்(க்) கை
விட முடியாது முடியவில்லை

(பங்குனி 2006)

knives & collapses I & II

knives & collapses i

நான் இருக்கிறேன்
“குஞ்சு குஞ்சு மேகங்கள்
வானில் வட்டமான அம்புலியில்
அம்மா அனேகமாக இரவுகள் சோறு ஊட்டியிருக்கிறாள்”
இந்த வரிகளில் வசந்தி அன்ரி இருப்பதுபோல..

நீ உயிர்த்தெழுந்த படுக்கையில்
நான் இல்லை
நான் இருக்கிறேன்

உனது உதடுகள் எனக்கு சொந்தமில்லையாதலால்
கால்களைத் தேடுகிறேன்
கால்சராயை விலக்கிப் பாதங்களில் முத்தமிடத் துடிக்கிறேன்

இப்படித்தான்–
சிறுமியாய் இருந்தபோது
வசந்தனைத் தேடிப் போனான் தகப்பன்
அவனுக்கு என்ன ஆனதெனக் கேட்டு

பிரசுரங்கள் ஒட்டியபடி நின்றிருந்தவனை
பிடித்துக் கொண்டுபோனவர்களை
அவனது கனவுகள் பிடுங்கும்
கொடும் வதைகளினூடு
அந்த மெல்லிய கறுவல்
இன்னும் உயிருடன் உள்ளானா?
கண்களில் கனவுடன் இருக்கும் அவளது நெஞ்சிற்கு
உம்மிடம் பதில்கள் உள்ளதா?

கேட்ட அவனை, அவனது தோழர்களை
அவர்கள்
ஆயுதங்களாலும் கற்களாலும் எதிர்கொண்டார்கள்
நிராயுதமாய்
கிடைத்த சிறிய ஜீவனை வதைக்கும் மகிழ்வு
சகோதரர்களே உங்களிடத்தில் எப்படி வந்தது?
- அது எங்கிருந்து வந்து சேர்ந்தது?
அமைதி இராணுவம் காவல்நின்றியக்க
மண்டையைப் பிளந்து
கத்தி செருகி
(இப்படித்தான் அவனது ஆன்மாவை ஆயுதங்கள் நெருங்கின
இப்படித்தான் எம்மது கனவுகளுள் சர்ப்பங்கள் நுழைந்தன)

முடிந்தான் என்றார் வைத்தியர்
உறவினர்க்கு அறிவித்து
‘சவத்தை’ ஏத்த
‘வான்’ பிடிக்கப் போனான் சகோதரன்
வழக்கத்துக்கு மாறாய் திருநீறு பூசாமல்
அப்பனின் அப்பன் நெஞ்சிரைய ஓடினான்:
“என்ர பிள்ளை என்ர பிள்ளை”
அவனது தோழர்கள் அவனை விடவேயில்லை
பிடிவாதமாய் ஒலிக்கிறது அவர்களது குரல்:
“யாழ்ப்பாணம் கொண்டு போவம்”
“அம்புலன்ஸ பிடி”
அந்த ‘வான்’ கரடுமுரடான கிராமத்துத் தெருவில்
உயிராபத்துடன் ஓடும்
(அது எந்த கிராமம்? அது உனது கிராமம்)

அவளிடம் யாரும் சொன்னார் இல்லை
வெடுக் வெடுக்கென நடக்கும் கோழிபோல
உள்ளுணர்வுகளில் அனர்த்தம் வெடுக்கென நீட்ட
கைப்பிள்ளையோடு
ஒரு விசரியாய் ஓடினாள் அவள்
(அந்தரா அப்போ உனக்கு வயது நான்கு)
உணர்வுகள் கணமும் காயம் பீரிட்டு வெளிப்பட நிக்கும்
அவளிடம் சொல்ல
யாரும் துணிந்தாரில்லை

வயிற்றலடித்து அழுதாள் அம்மையின் அம்மா
ஐயோ.. என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே

வன்னிக் காடே உனக்கு நினைவிருந்திருக்கும்
குடா நாட்டுக் கடல்களே உங்களுக்கு நினைவிருந்திருக்கும்
ஒரு கறிக்குதவா மரக்கறியாய்
உணர்ச்சியற்ற மரமாக
‘வழங்காத’ உடலாக ஏனும்..ஏனும்
‘உயிருடன்’ கடவுளே
அவனைத் திருப்பித் தா
திருப்பித் தா
- என அவள் கதறிய கதறலை

~~
ஒரு பெயர்ந்த நிலத்தில்
இராட்சத சாலையில்
வாகனங்கள் வீசி
தொலைவில் நான் போயறியாத நிலத்தில்
நீ துயிலுள் போனாய்;
உன்னுடன் நான் இருந்தேன்
நான் இல்லை

சுவையறியாத உதடுடன் உன் கால்களைத் தேடி வருகிறேன்
நீ என் தகப்பன்

[பங்குனி 01.2007]

knives & Collapses ii

நேற்றைய குறிப்பிலிருந்து
knives & collapses உயிர்பெற
மீளவும்
ஃபீரீடாவின் உடலில் ஆணிகள் போல
கத்தியால் உறுப்பெங்கும் குத்தி
(கண்களிலும் புண்களிலும் கூட)

நா னிந்த
நீத்தவர் குரலிலிருந்து உறங்க விரும்புகிறேன்–
நெடுந் தூக்கம்

‘talk to her’
Pedro Almodóvar படத்தில் ஒரு கிளைக்கதை போல
திடுமென விசித்திரக் குள்ளனாகிய பெண்ணின் காதலன்
அவளது பெண்குறியுள் நுழைந்து
அதன் கதகதப்புள் என்றென்றைக்குமான
உறங்கத்திற்குச் சென்றுவிடுவதுபோல

கும்பகர்ணனாயி மறக்க, மறக்க-
தூங்கி மூச்சிழுக்கையில்
மரங்கள் வேர்க் கிழம்பி
அவன் மூக்கினுட் செல்ல நிற்பது போலே
நீத்தவர்கள்
உடலின் துவாரங்கள்வழி நுழைந்து
வாழ்வைச் சிதைத்தலை நிறுத்துவரோ
அவர்கள் கனவுகளிலிருந்து விடுபட
அவர்கள் வாழ்விலிருந்து விடுபட - மறுத்துத் தடுத்து
அடைக்கும் அருட்டல்களிடம்
விசரி ஆன் செக்ஸ்ரன்
‘என்றோ செத்தவர்களுக்காக செத்துக் கொண்டிருப்பாயா’
சுவர்களுக்குள் பிரதியொன்றிலிருந்து கேட்பாள்

[பங்குனி.02.2007/1:05 p.m.]


FireStats iconPowered by FireStats