January 17th, 2008

நோபலின் அரசியல், கவனம் பெறும் மற்றொரு உலகம்: டொறிஸ் லெஸ்ஸிங்



இவ்வருடத்தின்(2007) இலக்கியத்துக்கான நோபல் பரிசை டொறிஸ் லெஸ்ஸிங் பெற்றுக் கொண்டதையொட்டி இங்கிலாந்து ஊடகங்களில் எழுதிய பலரும் ‘இது ஒரு அற்புதமான தெரிவு (a fantastic choice)’ எனும் கருத்தையே முன்வைத்திருந்தார்கள். எனினும் அய்ரோப்பாவிற்கு வெளியிலிருக்கிற இலக்கிய ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கிற தெரிவாகவே இருந்திருக்க முடியும்: டொறிஸ் லெஸ்ஸிங் எனும் பெயர் அய்ரோப்பாவிற்கு வெளியே அவ்வளவு பரிச்சயமான ஒன்றல்ல.
இம்முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களாய் மிகவும் பிரபலமான சல்மான் ருஷ்டியில் ஆரம்பித்து தீவிரமாய் வாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் பரிச்சயமான மிலோராட் பாவிக் வரைக்கும் நிறையப் பேர் இருந்தார்கள். நோபலின் கடந்த வருடத் தெரிவான துருக்கியின் ஒரான் பாமுக் நிறைய சர்ச்சைகளின் மாட்டித் தவிக்கிற நபர். ஒரான் பாமுக்கின் தெரிவு மிகவும் கடுமையான அரசியல் விமர்சனங்களை நோபலுக்குப் பெற்றுத் தந்தது. மூன்றாவது மனிதன் இதழில் சாமுவல் ஹன்டிங்டனின் Clash of civilizationஐயும் பாமுக்கிற்கு நோபல் பரிசளிக்கப்பட்டதையும் முடிச்சுப் போட்டு ஒரு கட்டுரை ஜிப்ரி ஹாசனினால் எழுதப்பட்டிருந்தது. நோபல் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருந்த ஸல்மான் ருஷ்டி சில மாதங்கள் முன்னதாக இங்கிலாந்தின் கௌரவ விருதொன்றைப் பெறப்போய் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து ஃபத்வா பற்றிய மீள்நினைப்பூட்டலைப் பரிசாகப் பெற்றுக்கொண்டிருந்தார். இடதுசாரி, ஒரியன்டலிஸ, பின்காலனித்துவ விமர்சகர்கள் ருஷ்டியை இது விடயத்தில் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தார்கள். நோபலை வழங்குகிற ஸ்வீடிஷ் அக்கடமி சிக்கலை உணர்ந்து கொண்டிருந்தது. இம்முறை ‘பிரச்சனைகளற்ற’ இலக்கியக்காரர் ஒருவர் தேர்ந்துகொள்ளப்பட்டிருப்பதன் பின்னிருக்கிற அரசியல்கள் இவை.
தற்பொழுது 88 வயதாகிற டொறிஸ் லெஸ்ஸிங்(Doris Lessing, b.1919) 106 வருட நோபல் வரலாற்றில் நோபல் விருதைப் பெற்றுக்கொள்கிற பதினோராவது பெண். லெஸ்ஸிங்கிற்கு நோபல் என்பதை வாசிக்கையில் அவரது பெயர் நான் கேள்விப்பட்டிராத ஒன்றாகத் தான் இருந்தது. நான் எதிர்பார்த்த எழுத்தாளர்களுக்கு நோபல் இல்லாமல் போய்விட்டதில் சிறிது ஏமாற்றமும் இருந்தது. ‘பெண் அனுபவங்களின் ஆண்மை பெண்மை என்பவற்றை மீறிச்செல்கிற மொழி, அழன்றெழுகிற கவிதையெழுச்சி, நம்பிக்கையின்றி அலைதல் மற்றும் கனவு வலிமையுடன் ஒரு பிளவுண்ட நாகரீகத்தை முக்கிய பொருளாக்கி அதை நுண்மையாக ஆராய்ந்தவர்’ (the epicest of the female experience, who with scepticism, fire and visionary power has subjected a divided civilization to scrutiny) என்றது நோபலின் Press Release. சமீப காலங்களில் தமிழ்ச்சூழலின் முக்கிய விவாதப்பொருளாகியிருக்கிற பெண்மொழி குறித்த விவாதங்களை மேலும் நுண்மையாக உணர்ந்துகொள்ள உதவுமேயென்று நோபலின் சிபாரிசு வாக்கியங்களை நம்பி லெஸ்ஸிங்கின் ஐந்துபாக நாவலான(quintet) ‘Children of violence’இன் முதலாவது நூலான Martha Questஐ வாசிக்க ஆரம்பித்தேன்.
மார்தா க்வெஸ்ட் 333பக்க நீளம் கொண்டது. கதை மிக மிக மிக மெதுவாய் நகர்ந்தது. மிகவும் பழையதான கதைசொல்லல் முறை. ஆஸ்டினுடைய மிகவும் சலிப்பூட்டக்கூடிய புத்தகங்களைப் பரீட்சை நோக்கில் படித்துச் சலித்ததில் அப்படியான எழுத்துநடை மீதே ஒருவித வெறுப்பு வந்து விட்டிருந்தது. மார்தா க்வெஸ்ட் எனும் முக்கிய பாத்திரத்தின் பதின்ம வயதுகளை விவரிக்க ஆரம்பித்து, கதாபத்திரங்களை வடிவமைத்து அவற்றுக்கிடையிலான மோதுகைகளை உருவாக்கி, சமூகம் பற்றிய சித்திரங்களை உருவாக்கி சிக்கலடைந்து செல்கிற கதைத் திட்டம் என்பது ஒன்றும் புதிதானதில்லை. 60களில் எழுதிய கேத்தரீன் ஆன் போர்ட்டர் எவ்வளவோ பரவாயில்லைப் போலிருந்தது. ஆங்கில நாவல்களில் மிக வெளிப்படையாக ‘f’சொற்கள்(தூஷணங்கள்) இடம்பெறுவதுண்டு. லெஸ்ஸிங் அரதப்பழசான ‘make love’ போன்ற சொற்களையே பயன்படுத்தியது வேறு அவர் ஒரு பழமைவாதியாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தைத் தந்தது. முதலிரண்டு பக்கங்களில் Housewives Tales எனப்படுகிற வார்த்தையைக் கொண்டு லெஸ்ஸிங்கை ஒதுக்கிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எது எப்பிடியிருப்பினும் லெஸ்ஸிங் குறித்து எழுதப்பட்டவற்றைப் படித்தபின் அவரது பிரதிகளுக்குள் நுழைந்து பார்க்கலாம் எனத் தோன்றியது.
லெஸ்ஸிங் 1919ம் ஆண்டு பேர்ஸியாவில்(தற்போது ஈரான்) பிறந்தவர். குடும்பத்தினர் லெஸ்ஸிங்கிற்கு ஐந்து வயதாகும் போது பிரிட்டிஷ் கொலனியாக இருந்த ரொடேசியாவுக்கு(தற்போது ஸிம்பாப்வே) புலம்பெயர்கிறார்கள். தானியம் பயிரிடுவது அவர்களது வாழ்வாதாரமாயிருக்கிறது. விவசாய முயற்சி லெஸ்ஸிங் குடும்பத்தினர்க்குக் கைகொடுக்கவில்லை. வீட்டில் பணத்துக்கான தட்டுப்பாடு இருந்துகொண்டேயிருந்தது. 13 வயதில் லெஸ்ஸிங் பாடசாலையிலிருந்து விலக வேண்டி வந்தது. 15 வயதில் தாதிப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல்ல ஆரம்பிக்கிறார் லெஸ்ஸிங்.
அவர் வேலை செய்கிற வீட்டில்தான் வாசிப்புத் தொடங்குகிறது. வேலை ஓய்வு நேரங்களில் எஜமானி புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டுகிறாள். இலக்கியம், அரசியல், சமூகவியல் என நிறைய விடயங்களில் பரந்து பட்டு வாசிக்க இயலுமாயிருக்கிறது லெஸ்ஸிங்கிற்கு. 1937 அளவில் லெஸ்ஸிங் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எழுத ஆரம்பிக்கிறார். பின்னர் தொலைபேசி ஒப்பரேட்டராக வேலை நியமனம் பெற்று அமைதியாக எழுத முடிகிறது. முதல் திருமணம் இரண்டு குழந்தைகள் மற்றுமொரு விவாகரத்திற்குப் பின்பு லெஸ்ஸிங்கின் ஆர்வம் மார்க்சியச் சிந்தனைகளின் பக்கம் திரும்புகிறது.
Left Book Clubஎனும் இடதுசாரி அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கவாரம்பிக்கிறார் லெஸ்ஸிங். 1940களில் அணுவாயுத எதிர்ப்பு மற்றும் தென்னாபிரிக்க நிறவெறி அப்பார்தெய்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்கிறார். ரொடேசியாவில் டொறிஸ் லெஸ்ஸிங்கின் எழுத்துக்கள் தடைசெய்யப்படுகின்றன, எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டி வருகிறது. Left Book Clubஇல் சந்தித்து மணம் முடித்த இரண்டாவது கணவர் 1979 உகாண்டாவின் இடாமீன் கலம்பகத்தில் கொல்லப்படுகிறார். இப்படியாக லெஸ்ஸிங்கின் தனிப்பட்ட வாழ்வு என்பது மிகவும் துயரமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.
லெஸ்ஸிங்கினுடைய முதல் நாவலான The Grass is singingஉம் அதற்கடுத்து 62இல் வெளிவந்த The golden notebookஉம் அவருக்கு புகழைச் சம்பாதித்துத் தந்தன. பெண்களின் அனுபவங்களை மையப்படுத்திய இடதுசாரிச் சாய்வுகள் கொண்ட லெஸ்ஸிங்கின் பிரதியாக்கக் காலப்பகுதி திடீரென முடிவுக்கு வந்து அவர் விஞ்ஞானப் புனைகதைகள் எழுதுபவராக மாறுகிறார். லெஸ்ஸிங்கின் மீது அபிமானம் கொண்டவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சி தருகிற ஒன்றாய் இருந்திருக்கிறது. 80களில் லெஸ்ஸிங்கின் நூல்களுக்கு விமர்சனமெழுதிய பலரும் இந்த மாற்றத்தை உவப்பானதொன்றாய்ப் பார்க்கவில்லை. அவர்களுக்கு லெஸ்ஸிங் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்: ‘: “What they didn’t realize was that in science fiction is some of the best social fiction of our time.” பின்நவீன புனைகதையாளர்கள் சொல்கிற பதிலை லெஸ்ஸிங்கும் சொல்லியிருப்பது ஆச்சரியம்தான்.
லெஸ்ஸிங்கின் The Golden Notebook நாவலை feminist classicஆக Elaine showalter போன்றவர்கள் வாசிக்கிறார்கள், இதை லெஸ்ஸிங் விரும்புவது இல்லை. பெண்ணிய அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாசிப்புகளை லெஸ்ஸிங் ஊக்குவிப்பதை அவரது நேர்காணல்களில் காணமுடிகிறது.
சர்வதேச அளவில் கொண்டாடப்படுபவரான Margret Atwood எனக்குப் பிடித்த பெண்பிரதியாளர்களான Erica Jong, toni Morrison போன்றவர்கள் லெஸ்ஸிங் தம்மைப் பாதித்திருப்பதாய் எழுதியிருந்ததைக் கண்டபோதுதான் லெஸ்ஸிங்கைப் பொறுமையாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதிலும் பெண்ணிய விமர்சகரான Elaine Showalter லெஸ்ஸிங்கின் பிரதியாக்க நுட்பத்தை ‘a long process of feminist self construction with self-dissidential totality’ (தனக்குள்ளாகவே வேறுபடும் முழுமையுடன் கூடிய பெண்ணிய சுயத்தைக் கட்டமைக்கும் நீண்ட செயன்முறை) என்பதாக வியாக்கியானப்படுத்தியிருந்தார்(interpreting). மிக மிக மிக மெதுவாக நகர்வதாய் எனக்குத் தோன்றிய கதைசொல்லலின் நியாயங்களைப் புரிந்து கொண்டு Martha Questஐ மீளவும் கையிலெடுத்தேன்.
Martha Quest பெருமளவுக்கு லெஸ்ஸிங்-இன் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒத்துப்போகிற தன்வரலாற்றுத் தன்மைகள் கொண்டது.
மார்தா என்பவளின் பதின்ம வயதுகளை நாவலின் முதல்பாகம் விபரிக்கிறது. பழமைவாதிகளான தாய், தகப்பன் மற்றும் சமூகம். அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் மார்தாவின் கனவுகளும் முரண்படுபவை. தலைமுறை, தொடர்பாடல் இடைவெளிகள். இவற்றால் நெருக்கடியுறுகிற மனித உறவுகள். வலிநிறைந்த மோதுகைகளால் நிரம்புகிறது முதலாம் பாகம். Marthaவின் தய் கனவு காண்கிறாள்:’My daughter will be somebody, whereas yours will only be married’. மார்தா Somebodyயாய் இருக்க விரும்புகிறாளில்லை, அவள் மார்தாவாகவே இருந்துவிட நினைக்கிறாள். தாயின் கனவுகளை, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மீற எத்தனிக்கிற மார்தா வாழுமிடம் ஒரு பிரிட்டிஷ் கொலனி. மீறலுக்கான உந்துதல் என்பது விமர்சன உணர்வுறுதலுக்கு அவளை உட்படுத்துகிறது. துலக்கமான பார்வை மார்தாவிற்கு சாத்தியமானதையொட்டி பிரிட்டிஷ் காலனியாதிக்கம், நிறவேறுபாடுகள், போலித்தனங்கள், மதம் எல்லாம் அவளால் நிராகரிக்கப் படுகின்றன. நாவலின் கதையோட்டத்தில் சுதேசிகளின் ஆதங்கங்கள், விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான விருப்பு என்பவையும் இணைக்கப் படுகின்றன.
மார்தா கேள்விகள் கேட்கிறாள். நிறைய வாசிக்கிறாள்; மார்க்ஸ் எங்கெல்ஸ் உட்பட எல்லாம். பெற்றோரை நோக்கி மார்தா சொல்கிறாள்: “Damned hypocrisy… all this nonsense.” மதத்தை தனக்குரியதாக அவள் பார்ப்பதில்லை, அவளைப்பொறுத்தவரை ‘you and your christianity’. தகப்பனும் தாயும் மீள மீள சொல்கிறார்கள் ‘you yougner generation, freethinkers.. it’s immoral. There are certain values.’ இப்படியாகவே தொடருகிற உரையாடல் ஒருகட்டத்தில் சலித்துப் போகும்வரை நீள்கிறது, என்ன செய்வது நிஜத்தில் இந்த மோதுகை இப்படியாகத் தான் -சலிப்பூட்டும்படியாக/அபத்தமாக- இருக்கமுடியும் என்பதற்கு எமது இலக்கியச் சூழலின் CentripetalXCentrifugal சண்டைகளே நல்ல உதாரணம்தான் இல்லையா?
மார்தா அர்த்தங்களைக் கேள்விக்குட்படுத்துகிறாள். தாய் நல்லவள் (good) என மார்தாவுக்குக் கூறப்படுமிடத்தில் மார்தா “what do you mean by good?” என்கிறாள். தந்தையின் சமாளிப்புகள் சிதறடிக்கப்பட்டு அர்த்தங்கள், அவை யாருடையவை? யாருக்கானவை? என்றெல்லாம் சிந்திக்கும்படியாக மார்தா விவாதிக்கிறாள். தந்தை இறுதியில் சொல்கிறார்: ‘இப்படியெல்லாம் தொடங்கினாயென்றால் எங்குபோய் முடிவாயோ தெரியாது”
தந்தையார் சொல்வதைப் போலவே மார்தா எதிர்பாராத மாற்றங்களுக்கூடாக நாவல் முழுதும் அலைகிறாள். மணம்புரிவதற்கென அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் என்பவனுடன் அவளால் ஒருமிக்க முடிவதில்லை. ஒருவித விலக்கம் இருப்பதை உணர்கிறாள். குழம்பித் தெளிந்து குழம்பி, குழம்பிக் கொண்டிருப்பதே மார்த்தாவின் இயல்பாகிவிடுகிறது. பின்நவீனம் கொண்டாடுகிற Supreme State of indecision-இற்குள் மார்தா இழுபட்டுப்போகிறாள். நாவல் முடிகிறது. மார்தா க்வெஸ்டின் வாழ்க்கையை தொடர்தும் விபரித்துச் செல்கிற மற்ற நான்கு நாவல்களும் என் கைக்குக் கிட்டவில்லை.
Martha Questஐ திரும்பத் திரும்பப் படிக்கும்படியான புத்தகம் எனச் சிபாரிசு செய்ய முடியாது. அந்த எழுத்துநடையின் சலிப்பூட்டும் அமைதித்தன்மைக்குப் பழக்கப்படுத்திக்கொண்டால், புத்தகத்தில் ஒளிந்திருக்கிற கவித்துவம் உறைக்கக் கூடும். சில சில இடங்களில் லெஸ்ஸிங்கின் நடை கவித்துவமிக்கதாய் இருக்கிறது: “She looked across the veld to the Dumfries hills and re-fashioned that unused country to the scale of her imagination.”
பிரதியாக்க நுட்பங்கள், கவித்துவம் இன்னபிற இலக்கிய சமாச்சாரங்களுக்காகவன்றி ஷோவால்டர் கூறிய பெண்ணிய அடையாளத்தைக் கட்டமைத்தல் எனும் செயன்முறையை வாசிக்க விரும்புகிறவர்கள் லெஸ்ஸிங்கை வாசிக்கலாம். விமர்சன உணர்வுறுதல், மீறுதலின் வேட்கையும் selfஐக் கட்டமைத்தலும் போன்ற பல விடயங்களில் மார்தா க்வெஸ்ட்(+லெஸ்ஸிங்கின் ஏனைய பிரதிகள்) உபயோகப்படக் கூடியது. பெண்கள், வாழ்நிலமைகள் என்பன பற்றிய உரையாடல் இலக்கிய உலகத்தில் போதிய அளவுக்குக் கவனம் பெறுவது இல்லை என்பது நோபலின் பட்டியலைப் பார்த்தாலே தெரிந்துவிடும். கடந்த வருடம் பாமுக் நோபல் பெற்ற போது இஸ்லாமியக் கலாசாரத்தைத் தகர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக அது கருதப்பட்டு சர்ச்சைகள் நடந்தன. ஹரோல்ட் பின்ரருக்கு வழங்கப்பட்ட போது ஏகாதிபத்திய எதிர்ப்பு/அமெரிக்க எதிர்ப்பு எனும் விவாதங்கள். இது போலவே வி.எஸ்.நய்பால், ஹெசே சரமாகோ எனப் பலரும் அரசியல் சர்ச்சைகளில் சிக்குண்டவர்கள். லெஸ்ஸிங்கைத் தேர்வு செய்திருப்பதென்பது இப்படியான கொதிநிலையிலிருக்கும் சிக்கல்களை அமைதிப்படுத்தும் உள்நோக்கமுடியது என்பதை முன்னரே சொல்லியிருந்தேன். அதை நிரூபிப்பது போலவே லெஸ்ஸிங்கின் தெரிவுக்கு கிடைத்த ‘பிரச்சனையற்ற’ எதிர்வினைகள் அமைந்திருக்கின்றன. ஒரு சில பெண்னியர்கள் கண்டித்தார்கள். லெஸ்ஸிங்கின் பெயர் பரிச்சயமில்லாதவர்கள் குழம்பினார்கள். பலரும் பாராட்டியதை இங்கிலாந்து ஊடகங்கள் பெரிது படுத்தின என்பதற்கு மேலாக லெஸ்ஸிங்கின் பிரதிகளைக் கணக்கிலெடுத்து அவற்றை விசாரணை செய்வதற்கு யாருக்கும் இஷ்டமில்லைப் போலிருக்கிறது.(அதுதான் நோபலின் விருப்பாகவும் இருக்கலாம்) அடுத்தமுறை, அல்லது அதற்கடுத்தமுறை மீளவும் ஒரு அரசியல் புனைகதையாளர் தேர்ந்தெடுக்கப் படுகையில் எழும் விவாதங்களில் லெஸ்ஸிங்கின் பெயர் மீளவும் மறக்கப்படும் என்பதுதான் கசப்பான உண்மை.
நோபல் பரிசு பெற்ற கேத்தரின் ஆன் போர்ட்டரின் பிரதிகள் பெண் அனுபவங்கள் என்கிற ரீதியில் கவனிக்கப் பட்டவையல்ல. அமெரிக்காவில் அப்பிரதிகள் தெற்கைச்(மெக்சிகோ) சேர்ந்த ஒருத்தரின் பிரதிகளாகவே அதிகம் கவனிக்கப் பட்டன. நீண்ட காலத்திற்குப் பிறகு விருது பெற்ற மற்றொரு பெண் எழுத்தாளர் ஒஸ்திரியாவின் எல்பிரைடே ஜெலினெக். ஜெலினெக்கின் பிரதிகளில் இருந்த eroticism மிக மோசமாக வாசிக்கப் பட்டு அப்பிரதிகளில் இருந்த concerns மற்றும் அரசியல்கள் அமைதிப்படுத்தப் பட்டன. (சாரு நிவேதிதா ஜெலினெக்கை தமிழில் அறிமுகப்படுத்திப் பேசியபோதும் சரி, The piano teacherஐத் தனது ‘ஆண்களின் படித்துறை’ கதையை நியாயப்படுத்த ஜே.பி.சாணக்யா பயன்படுத்திய போதும் சரி ஜெலினெக்கின் பிரதியில் இருந்த பெண் உடல் எனும் பிரதி பற்றிய அரசியல் அக்கறைகள் கவனிக்கப்படவில்லை என்பதை இணைத்து வாசிக்கவும்). இப்படியான விபத்துக்களுக்கு லெஸ்ஸிங்கின் பிரதியில் அவ்வளவாக இடமில்லை, பிரதியில் வைக்கப்பட்டுள்ள பெண்நிலைசார் பதிவுகளை overshadow செய்கிற அம்சங்கள் குறைவு என்பது சாதகமான ஒன்று.
பெண் எழுத்து(Ecriture Feminine) என்பது தளமற்ற avant garde பண்புகள் கொண்டது. உளவியல், தத்துவ, கலை ரீதியான வாசிப்புகளின் பெண் எழுத்து என்பது உயர்வான ஒன்றாகவே இருந்த போதிலும் பெண்களின் வாழ்நிலமைகள் பற்றிய துலக்கமான தரவுகளை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளவியலாது. பெண் எழுத்து என்பது மிக உயர்வானதொரு எழுத்து வகையாக இருக்கிற போதும் அதுவே அனைத்திற்கும் போதுமான ஒன்று அல்ல. பெண்ணிய இனைவரைவியல்(Feminist Ethnography) என்று வரும்போது தளமற்ற, வரலாறற்ற, முற்றிலும் மொழிவிளையாட்டான பிரதிகளை எவ்வளவுதூரம்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும்? சிலவற்றைக் கட்டமைப்பதற்கு வரலாறுள்ள பிரதிகள் தேவைதானில்லையா? எனவே தான் பெண்ணியர்களுக்கு தன்வரலாறுகளும்(autobiographies), புனைவுசாரா எழுத்துக்களும் முக்கியமாகின்றன. ஜேன் ஒஸ்ரன், மேரி வூல்ஸ்ரோன்க்ராப்ட், ஜோரா நீல் ஹூர்ஸ்ரன் போன்றவர்களது புனைவுகள் மீள மீள விசாரிக்கப்படுவதும் இதன்காரணமாகத்தான்.
ஜேன் ஒஸ்ரனின் பிரதிகள் மறுவாசிப்பிற்குட்பட்ட விதங்களில் லெஸ்ஸிங்கை வாசிக்கும்போது நாம் நிறையப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. ஒஸ்ரனின் நாயகிகள் அக்காலத்திய ஆங்கிலப் பெண்களின் விடுதலை பற்றிய கனவுகளால் ஆனவர்கள். அவர்களுடைய வாக்கியங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பெண்ணிய சுலோகங்களாயும் மாறிப்போய்விட்டிருக்கின்றன.[எ.கா: “Do not consider me now as an elegant female intending to plague you, but as a rational creature speaking the truth from her heart” - p.91 Pride and Prejudice Jane Austen penguin]
மேலே அடைப்பிடப்பட்ட எலிஸபெத்தின் கூற்றைப் போல மார்தா நிறைய விடயங்கள் சொல்கிறாள். அவற்றை உரிய முறையில் கேட்க வேண்டுமெனில் பெண்ணிய இடையீடுகளை லெஸ்ஸிங்கின் பிரதிகளுக்குள் நிகழ்த்தியாகவேண்டும். அது நிகழ்ந்தால் தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது லெஸ்ஸிங்-இற்குப் பரிசு வழங்கிய நோபலின் அரசியல் உள்நோக்கங்களைத் தோற்கடிக்க முடியும்.



April 25th, 2007

எஸ்போஸ் குடும்பத்தினர்க்கு உதவி…



எஸ்போஸ் கொல்லப்பட்டார். அது ஒரு தகவல் மட்டுமாகவே போயிற்று!
நாமும் சக வலைப்பதிவர்கள் சிலரும் அஞ்சலிகளை எழுதி அப்பால் சென்று விட்டோம்.
இலங்கையின் பத்திரிகைகள், வானொலிகள் குறித்து எழுதத் தேவையில்லை.
இனியென்ன?
செல்வி, கோவிந்தன்.. என்று பெயர்ப்பட்டியலில் எஸ்போஸை சேர்த்து எதிர்ப்பு இலக்கியம் எழுதுவதா?
தொகுப்பு வெளியிடுவதா?

சற்று சிந்திப்போம்.
நாம் எழுதுகிற அஞ்சலிக் குறிப்புகள், கவிதைகள், கண்டனங்கள் வெளியிடப் போகும் தொகுப்பு, எதிர்ப்பு இலக்கியம் எல்லாவற்றுக்கும் அப்பால், அப்பால் அந்த இளம் விதவையும் சிறு குழந்தைகளும் இருந்தபடியேதானே?
எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த குடும்பத்தின் சிதைவு தடுக்கப்பட முடியாதது அல்லவா?
அவர்களது எதிர்காலம்?
அந்தப் பிள்ளைகள் இனி அவர்களது புழங்கு வெளிகளில் எதிர்கொள்ளப் போகிற சொற்கள்/பார்வைகள்?
‘ஏழு வயதுச் சிறுவனை சாட்சியாக இருக்கவிட்டு’ இந்த வரிகளுடன் முடிகிறது டிஜேயின் பதிவு. நாமோ அதைப் பற்றி பேசவேயில்லை. பொடிச்சி ஒரு கவிதையை பதிவிட்டு விட்டு அப்பால் செல்கிறார். அவ்வளவு தானா? எல்லாமே இத்தோடு முடிந்து போயிற்றா?
அந்த சிறுவன் முன் அப்பாவை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எப்படியிருந்திருக்கக் கூடும் அந்த அனுபவம்? அந்த இரவில் அந்த சிறுவன் அனுபவித்திருக்கக் கூடியவற்றை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?
கொலையாளிகள் அச்சிறுவனை உறங்கும்படி கூறிச் சென்றார்கள். ஆனால், எமது அரச இயந்திரம் அச்சிறுவனை உறங்க விடாது. அவன் வாயிலிருந்து அந்த கொடூரமான இராத்திரியை பல தடவைகள் தவணை முறையில் மீட்டுப் பார்ப்பார்கள். நீதிபதி சலிப்புடன் இக்கொலை பற்றி சொன்ன வாக்கியங்களை தமிழ்நெற்றில் கண்டீர்கள் தானே?
எஸ்போஸின் மனைவி இரண்டாவது தடவையும் விதவையாக்கப்பட்டிருக்கிறார். முன்னரும் அவர் தன் கணவனை வன்முறைக்கு பலிகொடுத்தவர்.
எஸ்போஸ் உயிரோடு இருந்த காலத்தில் பணத்துக்கு அல்லாடிக் கொண்டிருந்தவர் என்கிறார்கள் அவரோடு நட்பாக இருந்த நண்பர்கள்.
எஸ்போஸை அறிந்தவர்களால் கூட அங்கு சென்று ஆறுதல் சொல்ல முடியாத நிலை. தொலைபேசக் கூட பயப்படுகிறார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டும் என்பது புரிகிறது.
எமக்கோ எஸ்போஸுடன் எவ்வித தொடர்புகளும் இருந்தது இல்லை. நாமென்ன செய்ய?

கொழும்பில் அல்லது இலங்கையின் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு எஸ்போஸ் குடும்பத்துக்காக பணம் திரட்டுவதில் சிக்கல்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தொலைபேசினாலோ, நேரில் சென்று கதைத்தாலோ வீண்சந்தேகங்கள் கிளம்பிவிடக்கூடும். அது நாளைக்கே உங்கள் உயிரைக் குடிக்கும் அளவுக்கு வளரவும் செய்யும்.

எனவே தான், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் வதிகிறவர்களை நாம் வேண்டி நிற்கிறோம்.
உங்களால் இயலுமானதை செய்யப் பாருங்கள்.

எவ்வாறு தொடர்பு கொள்வது:
எமக்குத் தெரியாது. எஸ்போஸின் தொடர்பு இலக்கங்களோ அல்லது முகவரியோ எம்மிடம் இல்லை. கொழும்பில் / வன்னியில் இருக்கும் இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் தொடர்புறுங்கள்…

[இதை எழுதுகையில் ‘கவிஞர் எஸ்போஸ்’ தவிர்ந்து யாராகிலும் வேறொருவருக்கு இதை செய்கிறோமா? செய்ய முடிகிறதா? சாத்தியமா? அப்படியெனில் இது எவ்விதத்தில் நியாயம்? கவிஞர்கள்/புத்தி ஜீவிகளுக்கு முன்னுரிமையா? விளிம்புகள் எப்பவுமே அப்படியே தானா? என்ற கேள்விகள் தொந்தரவு செய்கின்றன. விடை தெரியவில்லை.]

-முரண்வெளி-



April 20th, 2007

சந்திரபோஸ் சுதாகர் [எஸ்போஸ்]



[வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்திரபோஸ் சுதாகர் எனப்படும் இளைஞர் பலியாகியுள்ளார்.
இவர் 90களிலிருந்து கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவரென தெரியவருகிறது. தீவிர இலக்கிய ஆர்வமுடையவரான இவர் சிறிது காலம் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்
-ஏப்ரல் 18. முற்பகல் 11மணி வானொலி செய்தியறிக்கை]

பேசாமல் பிரியும் இந்த நாளில்
மீண்டும் எழுத முடியாத வார்த்தைகளை
மீண்டும் பேச முடியாத வார்த்தைகளை
விட்டுச்செல்கிறேன் உன்னிடம்
-சந்திரபோஸ் சுதாகர் [எஸ்போஸ்]
________________________
முள்ளென உறைந்த இந்த நாட்களில்
மிகப்புராதன பறவையொன்று
வடக்கையும் கிழக்கையும் விட்டு
வானத்தை தாண்ட முனைந்தது…
வடக்கையும் கிழக்கையும்
அது
வானத்தில் கடந்ததா?
இல்லை…
அது வானத்தை விட்டு மறைக்கப்பட்டிற்று.

முதலில்
கவிதையின் ஒளிமிகு நாட்களை
உன்னிடமிருந்து அவர்கள் பறித்தார்கள்
ஒரு பிச்சைக்காரன்
தனது கவளங்களை இழக்கும் துயரோடு
உனக்குள் அது நிகழ்ந்தது.

நீ என்னவாக இருந்தாய்..?
சத்தியமாக எனக்குத் தெரியாது…
நீ யாராகப் பார்க்கப் பட்டாய்?
உண்மையாகத் தெரியாது
ஆனால்,
பிணங்கள் கிடக்கும் என் நகரத் தெருக்களில்
நான் உணர்ந்தேன்
ஒரு கழுகின் இரையாய்
வலியறிந்து காத்திருக்கும்
உன் வார்த்தைகளை, உன் ஆன்மாவை

உனக்கான ஒரு கவிதையை எங்கனம் எழுதுவது?
உன் சாவுச்செய்தியை
எவளோ ஒருத்தி
இரத்தம் கழுவி வாசிப்பதை..
நானொருத்தன் எதையோ கிறுக்குவதை
எங்கிருந்து நீ அறிவாய்?
நீ எழுதியதைப் போலவே
கடலுக்கடியில் சாவுச்செய்தியை கேட்டபடியிருக்கிறாயா?
உனது பிணச்சாம்பல் படிந்த
இந்த வார்த்தையை அழிக்க முடியுமானால்
நான் நம்புவேன்.. நீ கொல்லப்பட்டதை
-முரண்வெளி | 19/04/2007-
_________________________________________________________

Killing spree escalates in Vavuniya
[TamilNet, Tuesday, 17 April 2007, 16:06 GMT]
Four armed men, conversing in Sinhala and Tamil, entered the house of a former editor of a Tamil magazine in Vavuniya Monday night, shot and killed the father of one. The killers then instructed the victim’s 7-year-old son, at gunpoint, to go to sleep, the grieving child told the district magistrate who conducted the inquest into the death of 32-year-old Chandrabose Suthahar, Tuesday. Killings were escalaing as never before on alarming rate in Vavuniya District, Manickavasagar Ilancheliyan, the district magistrate, told media appealing those concerned to act against the killing spree, after hearing the eyewitness boy.
The boy waited till the gunmen left the house Monday night and contacted his mother, who was on travel, from a telephone booth with the help of the neighbours to convey the message of his father’s killing by the gunmen.
The killing took place at Thirunavatkulam, 2 km north of Vavuniya town, around 8:30 p.m. Monday.
The victim was the editor of Nilam (”The Ground”) a handwritten magazine which was published earlier in Vavuniya.
Magistrate Ilancheliyan appealed to those concerned about the welfare of the general public to raise their voices against the killing spree.
“The situation is grave,” he said.
“I have to walk into the hospital mortuary every single day before I start my work these days.”
24 civilians have been killed within the past two weeks in Vavuniya.


FireStats iconPowered by FireStats