January 17th, 2008
பாதையில் நிற்பவர்கள்
தலைக்கவசம், கனமான சீருடை, துப்பாக்கி, தொடர்புச் சாதனம் மற்றும் கவலைகள் பயங்களைத் தாங்கியவாறு வெயிலுக்குக் கீழ் வீதியில் நிற்பது அவனது கடமை. பாதையில் நிற்கும் அவனது படைப்பிரிவே சமாதானத்துக்கான பாதையில் நிற்பதாக பேப்பரில் பார்த்த குறிப்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. சிரித்த கணத்தில் மேலுதட்டு வியர்வையை களைப்புடன் உணர்ந்தான். கைக்குட்டையால் நெற்றியையும் மேலுதட்டையும் அழுந்தத் துடைத்தவாறு நாளை மறு நாளில் இருந்து தனக்கு கிடைக்கவிருக்கும் மூன்று மாத கால விடுமுறையினை ஆசுவாசத்துடன் நினைவூட்டிக்கொண்டான். நின்று நின்று கால் உளைவதை உணர்ந்தவன் அருகில் இருந்த இடிந்த மதில் துண்டொன்றில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய சீருடைக்கும் ஆயுதங்களுக்கும் அந்நியமானவனாக திடீரெனத் தன்னை உணர்ந்தான். தனக்கும் அவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலுணர்ந்த மறுகணமே தாங்க முடியாத சுய பரிதாபம் ஏற்பட்டது.. தாகம் எடுத்தது. போத்தலினுள் குடிநீர் முடிந்திருந்தது. ஆத்திரத்தில் எட்ட இருந்த கல்லொன்றை பூட்ஸ் காலால் உதைத்தான். எச்சில் கூட்டி விழுங்கி பின் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான்.
வெய்யில் அவனுக்கு அறவே பிடிப்பதில்லை . குளிர் நிழல்களால் ஆன தரை கொண்டது அவன் கிராமம். அதன் நீர் நிலைகளையும் தாமரைக் குளங்களையும் ஆதங்கத்துடன் நினத்துக் கொண்டான். மூன்று வருடங்களாக பெரும் சிக்கல்கள் இன்றிக்கழிந்து போன அவனது பணி தற்போது மிகவும் சிரமமூட்டக்கூடியதொன்றாகவும் அச்சம் தக்கூடியதாகவும் மாறிவிட்டது. கிரனேட்டுகள் எந்நேரமும் வீசப்படலாம் என்பது மட்டுமே அவன் இந்த வெய்யிலிலும் மயங்கி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரே காரணி. பெரிய கருமேகம் ஒன்று சூரியனை மறைத்துக் கொண்டது. குளிர்ந்த காற்றாக பத்மாவை அவன் உணர முடிந்தது. ஒரு குறுஞ் சிரிப்பு அவன் உதடுகளில் ஓடி மறைந்தது. நாளைக்கு இதே நேரம் வவுனியா கழிந்த பிறகு தானும் அவளும் ரயில் ஜன்னலோர இருக்கை நெருக்கத்தில் செய்யக்கூடியவற்றை மீண்டும் காட்சிப்படுத்தி ஊகித்தான்.அந்த நினைப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது.
மேகம் மீண்டும் விலகியது. தங்கியிருக்கும் பதுங்கு அரணுக்கு செல்வதற்கான பேரவா அவனுள் தோன்றியது. ஜினசேன தயாரித்துத் தரும் நெல்லிக்கோர்டியல் மீதுஅவனுக்கு திடீர்க் காதல் ஏற்பட்டது.
மல்லிகை கொடியை தகரக்கூரைகளுக்கும் மண்மூடைகளுக்கும் மேலாகப்படர விட்டு ஜினசேனவும் மூன்று வருஷம் முன்பு சமரில் பலியான நிசங்கவும் அவ்வரணின் உள்ளே நிலவும் வெப்பத்தைத் தடுத்திருந்தனர். காலப் போக்கில் கொடி கிசுகிசுவென்று வளர்ந்து அரணை அடையாளம் தெரியாதவாறு மறைத்திருந்தது. பாம்பு, புழு, பூச்சி பயம் என்பதால் சொந்தச் செலவில் கம்பி நெற் அடிக்க வேண்டி இருந்தது. கூரையில் நீக்கல் இல்லாமல் பேப்பர் ஒட்ட வேண்டியும் இருந்தது. ஆனால் ஜினசேன, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஜப்பான் ரோஸ்களையும் வாடாமல்லியையும் அரண் சூழலில் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.
மூன்று மாதங்களுக்கு முன்பெல்லாம் இரவின் சுகமான குளிருடன் கலந்து வரும் மல்லிகையின் சுகந்தத்துடன் ஜினசேன மார்பு ரோமங்களுக்குள் ஊதி விளையாடும் சிகரெட் புகையின் கதகதப்பையும் சேர்த்து அனுபவிப்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. ஜினசேனவுடன் இருப்பதென்பது போதை மருந்தேற்றிக் கவலைகளை மறந்து போகச் செய்வதைப் போன்றது எனவும் அவன் சிந்தித்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் புணர்விற்கான வாதை முற்றிய தருணங்களில் நிகழும் யந்திரமயமான செயற்பாடாக அது மாறி விட்டது. சுய பரிதாபத்தையும் இழிவுணர்வையும் ஏற்படுத்தும் ஒன்றாகவும் தவிர்க்க முடியாததாகவும் அது மாறிவிட்டது. மேலும் ஜினசேனவை இவன் குதத்தில் புணருகையில் ஜினசேன முனகியவாறே வீதியை அவதானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. ஒருமுறை ஜினசேனவின் வாயில் குறியைக் கொடுத்து விட்டு அவனது தலைமயிரை அளைந்தவாறு வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். தூரத்தில் தெரிந்த ஒளிப்பொட்டொன்றின் மீது பயத்துடன் கூடிய கவனம் பதிந்ததில் ஸ்கலிதமாகு முன்னரே உறுப்பு சிறிதாகி விட்டது. பின் ஜினசேன ஆயிரம் வித்தை காட்டி அதை விரைப்படையச் செய்ய வேண்டி இருந்தது.
இந்த பதுங்கு அரணுக்கு வந்து சேர்ந்த காலத்தின் ஆரம்ப நாட்களில் ஜினசேன ஒரு அண்ணன் காரனைப் போலவே நடந்து கொண்டான். இவன் இருபதுகளின் தொடக்கத்திலும் அவன் முப்பதுகளின் நடுவிலுமாய் இருந்தது அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஜினசேன சற்று நாட்செல்லச்செல்ல ஒரு நெருங்கிய நண்பன் போல பேப்பர்களில் பிரசுரமாகியிருந்த யசோதாவின் புகைப்படத்தின் கிளுகிளுப்பூட்டும் அம்சத்தை அதன் பின் ஊரின் காதற்பொழுதுகளை கிளர்ச்சிகளைப் பேசத் தொடங்கினான். இதுவே குளிக்கும் போது இவன் மார்பின் அடர் ரோமத்தை அவன் கிண்டல் செய்வதாய் அவனது மதர்த்த மார்பகங்களை இவன் கிண்டல் செய்வதாய் வந்து முடிந்தது. இவ்வாறான நாட்களின் மாலைப் போதொன்றில் இவன் சிறுநீர் கழிப்பதற்காக கையில் பிடித்திருந்த குறியை ஜினசேன உற்றுப்பார்த்துச் சிரித்ததில் இருந்து போடப்பட்ட இந்த ஒப்பந்தம் இவனுக்குத் தற்போது அலுத்து விட்டது. உறவின் ஆரம்பக் காலத்தில் இருந்த அசிங்க உணர்வு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் ஜினசேனவின் உறுப்புக்காகப் பிரித்த உதடுகளை விகாரையில் புத்தர் முன் பிரிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டான். இப்பொழுதெல்லாம் ஜினசேனவுடனான புணர்ச்சி அருவருப்பாகத் தோன்றுவதற்கான காரணம் வேறு என்பதை அவன் அறிவான். அந்த உறவை விடவும் பத்மாவை முலைகளாகவும் உதடுகளாகவும் பின்னங்களாகவும் சந்தனாதித் தைல வாசனையாகவும் உணர்ந்தபடி சுயமைதுனம் செய்வது அவனுக்கு உவப்பாயிருக்கிறது. சுயபோகத்தின் பின்னரான வெறுமையும் அச்சமும் சுயபச்சாத்தாபமும் அவனை சோர்வச்சமடையச் செய்தபோதும் வேறெந்த நிகழ்வும் தன்னை நிம்மதியடையச் செய்ய முடியாது - இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கேனும் - என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். பத்மா முலைகளாகவும் சந்தன்னாதித் தைல வாசனையாகவும் உணரப்படாத பொழுதெல்லாம் அவன் மனது கவலையும் விரக்தியும் நிரம்பித் தளும்பத் தொடங்கி விடுகிறது.
பத்மா இவனுக்கு அறிமுகமாகி சில மாதங்கள் கூட ஆகியிருக்காது என்ற உண்மை மீது இவனுக்குப் பலத்த சந்தேகம். பல ஜென்மப் பிணைப்பு பந்தம் என நீளும் அவனது கவிதைகள் இந்தச் சந்தேகத்தின் அடிப்படையிலானவையே. பத்மாவின் தம்பி மூலமாகத் தான் பத்மா இவனுக்கு அறிமுகமானாள். இவன் இங்கு வர முன்னரே பத்மாவின் தம்பி ஜினசேனவுக்கு சிகரெட் வங்கித் தர அது வங்கித் தர இது வங்கித் தர என உபயோகப்பட்டுக்கொண்டிருந்தான். இவனுக்கு பத்மாவின் தம்பியை மிகவும் பிடித்திருந்தது. பொடிமல்லியை நினைவூட்டுவதாயிருந்த அவனது தோற்றமும் செயற்பாடுகளும் இனிப்புகள் வங்கித்தருவதற்கான காரணங்களாயிருந்தன. பத்மாவைக்காட்டி தனது அக்கா என அவன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இனிப்பு வங்கித் தர வேறு காரணமிருந்தது.
ஒரு முறை இவனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. றக்ரர் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு இவன் சேர்த்து வைத்திருந்த பணம் முழுதும் தாயின் வைத்திய செலவுக்குக் கரைந்து கொண்டிருந்ததில் இன்னும் எத்தினை நாளைக்கு முகாமில் கிடக்கவேண்டியிருக்கப் போகிறதோ என்ற கவலைகள் கூடியது. யோசனைகள் முற்றிய நாளொன்றில் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த பத்மாவையும் பொடிமல்லியையும் இவன் கண்டான். கண்கலங்கியவாறு அரைகுறைத் தமிழில் விபரம் விளக்கி தாயின் பெயரும் நட்சத்திரமும் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்ன போது சத்தியமாக அவன் மனதில் எவ்வித மென்னுணர்வுகளும் இருக்கவில்லை. பத்மா, பூசை முடிந்து வீடு திரும்புகையில், தேங்காய்ப் பாதியொன்றினுள் குங்குமம், திருநீறு, வீபூதி, நித்தியகல்யாணிப் பூக்கள் வாழைப்பழம் இட்டு நிரப்பி அவனிடம் தந்தாள். சைகையும் சிங்களமும் இதந்தரு புன்னகையும் கலந்த மொழியொன்றில் அவனது தாய் குணமாகி விடுவாள் என பத்மா கூறிய நொடியிலிருந்து அவளை குளிர்ந்த காற்றாக, சந்தனாதித் தைல வாசனையாக, புன்னகையாக உணரும் செயற்பாடு இவனுள் தொடங்கியிருந்தது.
வெசாக்கின் போது இதய வடிவிலான வெசாக் கூண்டொன்றை பத்மாவுக்கென வடிவமைத்துப் பரிசளித்தான். சனங்களுக்குக் கொடுப்பதற்காக படைத்தலமையகம் அளித்திருந்த பாற்சோற்றுப் பார்சல்கள், உடைகள், பலகாரங்கள், போன்றவற்றை வெற்று ஷெல் பெட்டியொன்றினுள் இட்டு பத்மா வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான். பிரத்தியேகமான இத்தகைய செயற்பாடுகளின் மூலம் தன்னைப் பத்மாவிடம் சொல்லிவிட முடியும் என அவன் நம்பினான். பதிலுக்கு, பொடிமல்லியுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடுகையில் அவள் முகம் புன்னகையுடன் ஜன்னலருகே தெரிந்தது. பிறிதெரு நாள் வீதியால் சென்று கொண்டிருந்த இவள் தடுமாறி கல்தடக்கி விழவும் அவன் ஓடி வந்து பிடிக்கவும் நாடகத்தனமாக காதல் தொடங்கியாகி விட்டது. விழுந்த பத்மா, பேச்சுச் சிங்களம் புத்தகம் அவன் கண்களில் பட வேண்டும் என்பதற்காகவே பிறிம்பாய் அதை விழுத்தினாள். அது அவனது கவனத்தை ஈர்க்கும் வகையில் விழுந்து கிடந்தது. ‘சிங்களம் படிக்கிறது? .. ஆ?’ என்று கேட்டவாறு முதல் பக்கத்தைத் திறந்த அவன் அதிர வேண்டியிருந்தது. அவனது பெயர் நெளிநெளியாக சிங்களத்தில் எழுதப்பட்டு வண்ணாத்துப் பூச்சி ரோஜாப்பூ படங்கள் கலர் பேனைகளால் வரையப்பட்டு இருந்தது. இரண்டு இதயங்களும் ஒரு அம்புக்குறியையும் தெளிவாகவே பத்மா கீறியிருந்தாள். புத்தகத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாள் அன்று. இச்சம்பவத்துக்குப் பின் வீட்டுக் கேற்றடிக்கு முற்றம் கூட்ட வரும் அவளை இவன் ஒருவித உரிமையோடு உற்றுப் பார்ப்பதும் சைகைகளை வெட்கத்துடன் அவள் பரிமாறிக்கொள்வதும் நடந்தன.
சம்பளத்தில் வீட்டுக்கு அனுப்புவது, தனியான வோக்மன் வாங்க, றக்ரர் வாங்க என்று சேமிப்பது போக தங்கச்சிக்காரிக்கு தோடு வாங்கவெனவும் பணம் சேமிப்பில் வைத்திருந்தான். அந்தப் பணத்தில்தான் தீபாவளி வந்த போது சாறி ஒன்றும் குமாரோதய வர்த்தகப் பதிப்புக்களும் வாங்கி இதயம் அச்சிடப்பட்ட பரிசுப்பொதித் தாளில் பொதிந்து பத்மாவுக்கென பரிசளித்தான். அந்தச் சேலைஅவளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பொடிமல்லியிடம் 50 ருhபாய் லஞ்சம் கொடுத்து அவளுக்குப் பிடித்தமான கலரைத் கெரிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதன் பின்னான அவர்களுடைய இரகசியச் சந்திப்பில் வீட்டில் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டானென கடிந்து கொண்டாள். பதிலுக்கு அவள் அதை எங்கனம் சமாளித்தாள் என அவன் வினவிக்கொண்டிருக்கவில்லை. அவளுடைய கோபத்தின் இடுக்குகளில் வெளித்தெரியும் புனித காதலை அவதானித்தவாறு குறுநகை புரிந்தான். அவள் அவனது மார்பில் குத்திச் சிரித்தாள்.
அவனுடைய மூன்று சகோதரிகள் பற்றி, அவர்களுக்குப் பிடித்தமானவை பற்றி, நகைச்சுவையாக உரையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. கடிதம் ஊரிலிருந்து வரும் நாட்களில் அவளுக்கு அதை மொழிபெயர்த்து சேர்ந்து சிரிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. அவளுடன் இருப்பது மாத்திரமே அவனுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விஷயம்.
இதுவரை அவர்களுக்கிடையே உடலுறவு ஒரே ஒரு முறை தான் நடந்தது. இன்றும் அந்த நிகழ்வை ஓர் அசௌகரியமான, அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவே அவனால் நினைவு கூரமுடிகிறது. உடலெங்கும் ஓடிமறைந்த குறுகுறுப்பில் அவளை இறுக்கி அணைத்து முரட்டுத்தனமாக அவளுடலைச் சுவைக்க முயன்ற வேளை பெரும் அச்ச உணர்வை அவன் அடைந்தான். மார்பகங்களைக் கையாளுகையில் பயத்துடன் உதடுகளைக் கடிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களை மூடிய நிலையில் இருந்தது சற்று ஆசுவாசமளித்தது. உறவுக்கு அவள் சம்மதித்த நாள் தொட்டு அவனைப் பயப்படுத்திக்கொண்டிருந்த விடயம் விந்து முதலிலேயே வெளியேறிவிடுகிற பிரச்சனை தான். வார இதழொன்றின் மருத்துவக் கேள்விபதில் பகுதியில் இதைப்பற்றி இவன் வாசித்தறிந்திருந்தான். பத்மாவினுள் புகுந்து நீண்ட நேரம் இயங்கியும் விந்து வெளிப்படவில்லை. குறி விறைத்தபடியே இருந்தது. இந்த நிலமை அவனுக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது. குறி சுருங்கிவிடக்கூடும் என அவன் மிகவும் அஞ்சினான். மனதை ஒருமுகப்படுத்தி இயங்குவதற்காக பதமாவின் மார்பகங்களை நோக்காது அவற்ரைக் கசக்கத் தொடங்கினான். இயலாமல் போகவே பத்மாவை மனத்திரையில் தூஷண வார்த்தைகளுக்கிடையில் இயக்கிப் பார்த்தும் தோல்வி கண்டான். கண்களை மூடியவாறே ஜினசேனவுடனான அனுபவங்களை மீட்டு, சில தூஷணங்களை முணுமுணுத்து உச்சமடைந்து இயங்கிச்சரிகையில் அவனுக்கு அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. பத்மாவின் மார்பகங்களுக்குள் புதைந்து விம்ம ஆரம்பித்தான். பத்மா பிடரித் தலைமயிரை அளைந்து அழுத்தியது அவனது ஆழுகையை மேலும் அதிகரிப்பதை உணர்ந்து உடைகளை அணிந்து கிளம்பினான்.
இதன் பிறகு, பத்மாவை உடலுறவுக்கென அவன் அழைத்தது இல்லை. திருமணமானால், தனது உடமையாக அவள் ஆகிவிட்டால் பயம் இருக்காது என அவன் நம்பினான். அவளை சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டி இருப்பதற்கான காரணங்களில் இதுவுமொன்றாயிற்று. அவனுடைய தமக்கைக்கும் தாய்க்கும் பத்மாவின் புகைப்படத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஊருக்குக் கூட்டிவந்தால் உடவத்த முதலாளியுடன் கதைத்து ஒருமாதிரி பன்சாலைக் காரங்களை ஒப்பவைக்க ஏலுமென அக்கா கடிதமெழுதியிருந்தாள். குழந்தை பிறந்தவுடன் தாயையும் தம்பியையும் புத்தளம் பக்கமாக கூப்பிட்டுவிடலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இவன் செய்யமுடியுமெனவும் பத்மாவுக்குக் கூறினான். கடிதமெழுதி வைத்துவிட்டு புறப்படுவதென பத்மா தீர்மானித்தாள். இவன் எல்லையற்ற மகிழ்வடைந்தான்.
‘அலாம்’ அடித்தது. அதன் தொடர்ச்சியான கீ கீ, அவனுக்கு எரிச்சலூட்டியது. மணிக்கட்டை பற்றி ஆத்திரத்துடன் அலாமை நிறுத்தி பதுங்கு அரணை நோக்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் ஜினசேன வருவது தெரிந்தது. பிளாஸ்க்கினுள் தேநீர் வாங்கி வைத்த்கிருப்பதாய்க் கூறி இவனைக் கடந்து போனான் ஜினசேன.
கிணற்றடிக்கு மேல்கழுவப் போன போது வேலி இடுக்கினால் பத்மா இவனை அழைத்தாள். மிகவும் பயமாயிருப்பதாய் கிசுகிசுத்தது அவளது குரல். புற்கள் சலசலத்ததில் பறந்த நுளம்புகள் காதுக்குள் கீ என்றன. பயப்படத்தேவையில்லை வவுனியாவில் சந்திக்கலாம் எனக்கூறி இனம்புரியாத பயத்துடன் அரணுக்கு வந்து சேர்ந்தான்.
மெழுகுதிரியைக் கொளுத்தி வீதியை அவதானித்தான். கப்பினுள் தேநீரை ஊற்றி கிழங்கு ரொட்டியிடன் சேர்த்துக் குடித்தான். குரல்களேதுமற்ற நிசப்தம் அவனுக்குப் பயத்தை தருகிறது. ஜினசேன திரும்பி வர பதினொரு மணியாகும். அவனால் இன்று நித்திரை செய்ய முடியாது. இதை அவனே நன்கறிவான். றேடியோவில் ஸ்டேஷன் பிடிக்க முயற்சி செய்தான். வெறுமையே இருந்தது. தமிழ் எப்.எம் ஒன்றில் விட்டுவிட்டு கிழங்கு ரொட்டி சுற்றி வந்த ஆங்கிலப் பேப்பரைப் படிக்கத் தொடங்கினான் - எழுத்துக்கூட்டி.
ஜினசேன, இவன் கேட்காமலேயே சமகன் தூளை தேநீருள் போட்டுக் கலக்கி குடிக்க வைத்தான். துக்கம் நிரம்பி வழிந்தது. ஜினசேன மெழுகுதிரியை அணைத்தான். போர்வை தன்மீது போர்த்தப் படுவதை உணர்ந்தான். ஜினசேனவின் சூடான மூச்சுக்காற்றால் உடலைப் போர்த்திக்கொள்வதற்கான விருப்பம் வந்தது. போர்வையை அகற்றி மெல்ல நகர்ந்து ஜினசேனவின் மீது கைகளைப் பரப்பி அணைத்துக் கொண்டான். ஓலமிட்டு அழ அவன் மனம் மிகவும் விரும்பியது.
இன்றைக்கு எழுந்ததைப் போல அதைகாலையில் அவன் என்றுமே எழுந்தது கிடையாது. குத்தும் பனிக்குளிரில் நடுங்க நடுங்கக் குளித்துத் தயாராகியிருந்தான். புத்தர் சுருவத்தைக் கும்பிட்டு ஜினசேனவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அணைத்து விலகினான். கண்ணீரைக் கண்ட ஜினசேன கேலியுடன் பின்புறத்தில் தட்டிச் சிரித்தான். ஜினசேனவின் குரல் கரகரத்திருந்தது.
பத்மாவின் மாற்றுடுப்புகள் இரண்டும் இவனது பொருட்களும் அடங்கிய பாக்-ஐ எடுத்தவாறு அரணுக்கு வெளியில் வந்து ராணுவ பஸ்சுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். சற்றுத் தூரத்தில் சூரியனின் வெள்ளொளியில் குளித்தவாறு பத்மா நின்றிருந்தாள். மனம் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கிற்று. அதீத சந்தோஷத்தில் அவளை நோக்கி கையசைத்த மறுகணம் காதைக்கிழிக்கும் வெடியோசையுடன் கதகதப்பான சிவப்புக் குருதியை முகமெங்கும் உணர்ந்தான். வெடியொலியின் பின்னணியில் காட்சிகள் மஞ்சள் நிறமடைவதையும் வெண்ணிறமான சூரியனை மறைத்தவாறு ராணுவ ஜீப்பில் இருந்து சிப்பாய்கள் குதித்தோடுவதையும் மோட்டர் சைக்கிள்கள் உறுமிப்பறப்பதையும் கண் இமைகள் மூடும்வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
November 2005
