July 16th, 2007
பெருவெளி & முரண்வெளி: விவாதத்தில் புத்தசூஃபிசித்தன்
மிக உயர்ந்த தரத்தில் நம் சமூகங்களுக்கு மிக அவசியமான ஒரு குறுக்கீட்டை விவாதமாக நிகழ்த்துவது குறித்து முரண்வெளி-பெருவெளி இருதரப்பினருக்கும் முதலில் நன்றிகள்.
முரண்வெ ளிக்கு முஸ்லிம் தோழியும், பெருவெளிக்குத் தமிழ் நண்பரும் தொலைபேசிகளில் சில முக்கியமான தகவல்களை வழங்கிவருவதால், நம் அடையாளத்தைச் சொல்லாது இதற்குள் நுழைந்துவிட முடியாதென்று தெரிகிறது. அடையாள நிராகரிப்பென்பது அடுத்தவரை நிராகரிப்பதன் அடையாளம்தான் என்று குரானா வேறு நிறுவுகிறார்.
எனவே இதை எழுதும் நான் ‘தமிழன் ‘ (ஸ்லாஸ் போட்டு ச்சி என்பதையும் குறிக்க வேண்டுமோ!….. ‘நான் முஸ்லிம் ‘ என்று சொல்கையில் இந்தச் சிக்கல் இல்லை என்பது எவ்வளவு வசதி! ) என்ற அடையாளத்துக்குரியவன் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். என் கருத்தை இங்கு சொல்லிவைக்க இந்த அடையாளம் போதும் என்று நினைக்கிறேன். பேரை/சாதியை/மதத்தை/ஊரை/ஊருக்குள்ளும் மற்றோரிலிருந்து வித்தியாசம் பேணும் என் வம்சாவளிப் பெயரை எல்லாம் உங்கள் அனுமதியோடு இங்கு மறைத்துவிடுகிறேன். அடையாள அட்டைகளைப் பரிசீலிக்கும் வேலையை இப்போதைக்கு சிங்களப் பொலிசாரிடமும் தமிழ்ப் பொலிசாரிடமும் விட்டுவிட்டு (முஸ்லிம் பொலிசார் இன்னும் உருவாகிவிடவில்லை என்ற நம்பிக்கையில்) நாம் உரையாடலுக்கு வரலாம்.
பெருவெளிக்கு முரண்வெளி வாசிப்புப் பிரதியை எழுதி அதற்கு றியாஸ் குரானா பதிலெழுதி… அதற்கு, ஏ/எல் பரீட்சையில் மும்முரமாகிவிட்ட முரண்வெளி பதிலெழுதுமுன் என் மிக எளிய சில குறிப்புகளை வைத்துவிட விரும்புகிறேன்.
எந்த ஒன்றின் மீதும் எங்கள் மனச்சாய்வு இன்றி ஒரு எழுத்தைத் தன்னும் எழுதிவிட முடியாதென்பதை முரண்வெளி ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன். (நடுநிலைப் பயங்கரவாதம் பற்றி அறிந்துகொள்ள நாம் பிபிசி சிஎன்என் வரை போகவேண்டியதில்லை, நமது நாளேடுகளே போதும் இல்லையா?) நாம் எந்த ஒரு வரியை எழுதும்போதும், அதன்மீது (பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையின்றியோ) நாம் எழுதாமல் மறைப்புக்குட்படுத்திய ஆயிரம் வரிகள் ஒளிந்துநின்று மூத்திரமடித்துக்கொண்டிருக்கின்றன. (விவாதத்தில் குறுக்கிடுவதற்கு இந்த வார்த்தைப்பிரயோகம் முக்கியமானது என்று யோசித்துக்கொண்டிருந்ததன் விளைவு, இங்கே கட்டாயமில்லாத போதிலும் வந்து விழுந்துவிட்டதோ!)
உங்கள் மனச்சாய்வு எங்கே என்பதையே குரானா அலசி எடுக்க முற்படுகிறார் என்பது வெளிப்படை. அடையாளங்களைக் கைவிடுவதாக அறிவிப்பதன் மூலம் நடுநிலை சாத்தியமாகிவிடுமா என்ன? திரும்ப ஒருமுறை யோசித்தால் உங்களுக்கே சிரிப்பு வருமே! ஆகவேதான் எந்தத் தரப்பில் நின்று உங்கள் ஆலோசனைகள் வருகின்றன என்பதன்மீது அவர் கவனம் குவிக்கிறார்.
உதாரணத்திற்கு, பெண்ணியவாதி ஒருவர், “உன் ஆண்திமிரைக் கொண்டெழும் உன் குறி மீது ஓங்கி ஒரு உதை விட விரும்புகிறேன் ” என்றெழுதினால், அதை வன்முறையாகப் பார்க்குமா நம் மனம்? இழிவான முறையில் அவள் மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் நம் ஆண்திமிரை நாம் அறிவோம் என்பதனால், ‘உன் கோபத்தைக் குறைத்துக்கொள் ‘ என்ற ரீதியில் நாம் அவளுக்குச் சொல்ல முற்படுவதில்லை.
மஹாகவியைச் ‘சாதிவெறியன் ‘ என்று சுகன் எழுதினால், (மரமேறும் எத்தன் பற்றிய குறும்பாவைக் குறித்து சுகன் எழுதியதை வாசித்த மனப்பதிவிலிருந்து சொல்கிறேன். நேரடியாக அப்படி எழுதியிருக்காவிட்டால், ஒருவேளை அப்படி எழுதினால் என்று வைத்துக்கொள்ளலாம்.) எழுத்தில் தெறிக்கும் வன்முறை, விரோதபாவம் நமக்கு உறுத்துவதில்லை. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது எவ்வளவு வன்கொடுமைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லியே எங்கள் உரையாடலை ஆரம்பிப்போம்.
இலங்கை முஸ்லிம்களின் அமைப்பாக்கம் பற்றிய உரையாடலிலும் கலந்துகொள்கிறவர்கள் தங்கள் சாய்வை மறுத்தபடி பேசுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் கரிசனம் கொள்ளும் தரப்பைச் சார்ந்தவர்களை இனங்காட்டியபடிதான் நம் பேச்சை முன்வைக்க முடியும். நம் கரிசனத்தை, அந்தத் தரப்பினர் மறுத்து அவர்கள் சுட்டும் எதிர்த்தரப்பினர் பாராட்டுவார்களாக இருந்தால் நம் சாய்வு பற்றிய ஐயப்பாடெழுவதை தவிர்க்க முடியாது.
முஸ்லிம் தேசம் என்ற பேச்சு, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையால் உருவானதல்ல என்பதை எல்லோருமறிவோம். எனில், முஸ்லிம் தேசம் என்ற பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு சொல்வதற்கு முன்நிபந்தனையாக, ஒடுக்கியது குறித்தும், ஒடுக்குதலுக்குள்ளாகியவர்களின் வலிகள் குறித்தும் முதலில் பேசவேண்டியது நியாயம்தானே!
நாம் அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எதிரானவர்கள்தான் என்ற அந்தரங்க சமாதானம் (அ.சுத்தியுடனானதுதானென்றாலும்) மட்டும் போதுமானதல்ல என்பதையே இந்த விவாதத்தின் போக்கும் நமக்கு உணர்த்துகிறது. அதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் உள்ள ஆபத்தும் உணரக் கூடியதே என்றாலும், சிலவற்றைப் பேசாமல் சிலவற்றைப் பேசுவதில் உள்ள வன்முறை பெரிதல்லவா?
அதேசமயம் பேசமுடியாப் பொருளையெல்லாம் பேச உசுப்பேற்றிக் கூத்துப் பார்க்கும் குரூரமும் நமக்கு வேண்டாம். சுதந்திரத்திற்காய்ப் பயணிக்கும் நம் புரட்சிகரச் சூழலில்(!) முரண்வெளி பேசும் அளவே அதிகமோ என்ற பதைபதைப்பு நமக்கு இருக்கிறது.
நம் மனச்சாய்வின் பக்கம் உள்ளவர்களோடு உரையாடலை நடத்துவது போல (நமது மனச்சாய்வை அந்த சாய்வுக்குரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதும் எழுத்தினால் நாம் எதிர்பார்க்கும் விளைவுக்கான சவால்தான்) பெருவெளி மீதான வாசிப்பை முரண்வெளி நிகழ்த்தக் கூடாதா என்பதே நமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
(இதுகூட நமது விருப்பத்துக்கேற்ப ஒருவரைச் செப்பனிட்டுக்கொள்ள முயலும் ஆலோசனை வழங்கலாகவே முடிகிறது. என்ன செய்ய? ஆலோசனைகள் சொல்வதற்கான உந்துதலை எவ்வளவு முயன்றாலும் அடக்கிக்கொள்ள முடியாமல்தான் இருக்கிறது!)
பெருவெளியின் முஸ்லிம் தேச நிலைப்பாட்டில், முப்பது வருடங்களுக்கு முந்திய எமது (தமிழ்) நியாயங்கள் சிலவற்றைக் கண்டுகொள்ள முடிவதால் அந்த அனுபவ மீட்டலை ஒரு மனம் திறந்த உரையாடலாக்கிக் கொள்ள பெருவெளி விரும்புமானால், அதற்குரிய சில குறிப்புகளையும் இங்கே…. (உந்துதல் தொடர்கிறது)
ஒரு பேரினத்தின் ஒடுக்குதலுக்குள்ளாவதில் ஏற்படுகிற வலிகளும், ரணங்களும், நியாயமான ஆவேசமும் அவலங்களுக்கெதிராக மக்களைத் திரட்டிக்கொள்வதற்கான உபாயங்களைத் தேடவைக்கிறது. ஒடுக்குதலுக்கெதிராக மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிகள் எல்லாம் நியாயமானதாகவே தோன்றுகிறது. பின்நவீனத்துவம் தெரியாமலிருந்த 70களின் பிற்பகுதியிலேயே “அவர்கள் வேறு நாங்கள் வேறு ” என்று வித்தியாசங்களைச் சொல்லி காசி ஆனந்தன் முழங்கியபோது, அது மற்றும் என்னென்ன வித்தியாசங்களை எல்லாம் விலக்கிவிடும் மனத்தயாரிப்பை தமிழர்களுக்கு வழங்கும் என்பதை முன்னனுமானிக்க முடியாமல்தானிருந்தது.
இன்று, பேச முடியாமலும், மாற்றுச் சிந்தனைக்கு முயன்றால் உடனே கொல்லப்பட்டுவிடுவதைக் கேட்க ஆளில்லாமலுமிருக்கும் ஒரு பகுதியினர், தமக்குக் குரல்தர வல்லோரைத் தேடும் நிலையில் வந்துமுடிந்துள்ளது. தமிழ் தேசியப் பெருங்கனவே ஒரு பயங்கரக் கனாவாக, மிரளும் இத்தமிழர்கள், அதை வெளிச் சொல்லவும் முடியாதவர்கள். முஸ்லிம்கள், தலித்துக்கள், மலையகத்தார் என ஒடுக்குதலுக்குள்ளாகிறவர்களின் வானவில் கூட்டணிக்குள் இத்தமிழர்களுக்கும் இடம் உண்டா?
கோட்பாட்டு ரீதியாக அது சரிப்பட்டுவர வழியுண்டா?
ஏனென்றால் தமிழக நிலவரத்தில், “நானும் ஒடுக்குதலுக்குள்ளாகிற ஏழை பிராமணன் ” என்று சொல்லிக்கொண்டு வருகிற ஒருவர் கோட்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டோர் பிரிவிற்குள் வந்துவிட முடியாது. பாம்புக்கென வைத்திருக்கும் தடியைத்தான் அவருக்கும் பாவிக்க வேண்டுமென்பதில் அங்குள்ள ஒடுக்கப்பட்டோர் கூட்டணிக்குள்ள உறுதி தெரிந்ததே.
ஒருவேளை அவர் தன்னைப் பகிரங்கமாக பறையன் என்றோ தலித் என்றோ அறிவித்துக்கொண்டு, தன் இனக்குழுவை முற்றாக நிராகரித்துக் கொண்டு செயற்பட்டால் வானவில் கூட்டணிக்குள் வரக்கூடும்.
ஆனால் இங்கு தங்கள் இனக்குழுவின் பொங்குதலை மறுப்போர் தங்கள் நிராகரிப்பை பகிரங்கப்படுத்த வேண்டுமென நிபந்தனை வைக்க முடியுமா?
அவர்களை, தீவிர ஒடுக்குதலுக்குள்ளிருப்பவர்களாகக் காட்டுவதே அவர்களின் பேசமுடியா நிலையும், பேசிச் செத்தால் கண்டுகொள்ள ஆளில்லாத அவலமும்தானே?
அவர்கள் தங்கள் இனக்குழுவின் பொங்குதல்களை வரவேற்றுப் பேச்சுரையாதிருப்பதும், மற்றவர்கள் அவலத்தைக் கண்டுகொள்ளாமல் தாம் மட்டுமே உலக மகா அவலத்திலிருப்பதாகக் கதைபேசிக் கொண்டிருப்போருடன் கலந்துகொள்ளாதிருப்பதும் அவர்களைத் தனித்துப் பார்ப்பதற்குப் போதாதா?
பெருவெளி இவர்கள் பக்க மனச்சாய்வினோடும் உரையாடலைத் தொடர ஏதும் தடைகள் உண்டா?…….
எழுத்துக்களைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் குத்தியதில் களைத்துப் போனேன். மிகுதிப் பேச்சை பிறகு வைத்துக் கொள்ளலாமே!
- புத்தசூஃபிசித்தன்
(அடையாளத்தை விரித்துக்கொள்ளும் ஆசை எல்லையற்று இருந்தபோதும், ஏனைய தரப்புகளை, பெண்ணை, அரவாணிகளை எல்லாம் இணைத்துக்கொள்ள இயலாது போய்விட்டதில் வருத்தம்)