January 17th, 2008
சைத்ரிகன் கவிதைகள்
சித்திரை மழையைப் போலும் உனக்கான இந்தக் காமம்
ஈரமிக்க மழைப் பொழுதின் முடிவைப் போல
அனைத்துமே பிசுபிசுக்க
காமம் பிணைகிறது
மழைக்காலங்களின் விறகடுப்பைப் போல…
திரைச்சீலைகளையும் இழுத்து மூடி
மெழுகுருகித் தீர்ந்து கவிந்த இருளில்
வாசிப்பதற்காய் என்னைத் தீண்டுமுன்
இன்னமும் ஆறிப்போய்விடாத
உன்னுடைய காதலை
ஒரு மதுக்குவளையளவு பருகினேன்
மழையெனப் பெய்யும் உன்னால்
நனைந்து ஊறும்
இரகசியத்தின் மணமிக்க அறை.
மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு
என்னிடமிருக்கிற
பொலிவிய நாட்குறிப்புகள் பிரதி
மிகவும் பழசானது தான்
நாளுக்கு நாள்
அதன் பக்கங்கள் மஞ்சளாகிக் கொண்டிருப்பதை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சொல்லித் தரப்பட்ட மௌனத்துடன்
எல்லா சிவப்புக் கனவுகளும்
இப்படியாக,
இப்படியாகவேதான்,
ஆமாம், இப்படியான மௌனத்துடன் தான்
நிறமிழந்து -அழிந்து- இல்லாது போயிற்று
சே
ஒக்டோபர் ஏழாம் தேதி*
இப்படியெழுதியிருந்தார்;
At 2 we rested
as it was now useless try
to advance.
____________________
• சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம்
மத்தியகாலக் கடவுள்கள் பற்றியதொரு கேலிச்சித்திரம்
அறையெங்கும் நகர்ந்துகொண்டிருக்கும்
தனிமைக்கு
இடுப்பில் துணியிருப்பதில்லை
கடவுள்கள் உட்பட எல்லாருமே
அதைப் பார்த்துத் தானிருக்கிறோம்.
அந்தரங்கமாக - மிக அந்தரங்கமாக
இக்கவிதையின் அசைவைப் போன்ற
வேட்கை மிகும் அசைவுகளுடன்
தனிமை தம்மைப் புணர்ந்து முடித்ததை
என்னிடம் சொன்னார்கள்,
விளக்கணைந்த தருணத்தில்.
அவர்களது சங்கடங்கள் எல்லாம்
அசந்தர்ப்பமாய்
விறைத்துப் போய்விட்ட உறுப்பை
நினைவுறுத்துபவை.
நானும்
இதே சிக்கலைப் புரிந்து வைத்திருக்கிறேன்.
அவர்களைப் பொறுத்த்வரை
இந்த விறைப்பு
சொல்ல முடியாத வார்த்தைகளாலும்
வெட்கப்பட வேண்டிய ஒலிக்குறிப்புக்களாலும்
ஆகியிருக்கிறது.
எல்லாம் முடிகையில்
எல்லாச் சொற்களும்
எல்லா ஒலிக் குறிப்புகளும்
கரைந்து முடிந்திருக்கும்.
பிறகு அவர்கள் தம்மைக் கழுவுகையில்
அனைத்தின் இருப்பும் இல்லாமலாகும்
பிறகு,
‘இது நடப்பது தானே’ என
மிகவும் சுருங்கிப் போய்விட்ட
வார்த்தையொன்றை
விறைப்புடன் சொல்வார்கள்