June 9th, 2007
ஆன்மாவின் சகோதரிக்கு…..
- கற்பகம் யசோதர

நீயின்றி ஒருநாள்
இத் தெருக்களைக் கடக்கையில்
என் பால்யத்தின் வாசனைகளில் மூழ்கினேன் _________
நிதானமற்றவளாய் விசரியாய்
காலமெங்கும் அதிரும்
நீ என் ஆன்மாவின் சகோதரி
நான் உன் ஆன்மாவின் சகோதரி
எங்களது தோழர்கள் தொடர்ச்சியற்றுப் போனார்கள்
பள்ளிகளின் சுவர்களில்
போரின் நினைவுகளது கண்கள் வெறிக்க
சிறு பராயத்து ‘அவர்கள்’
வரலாற்றில்
பெயர்களற்றுப் போனார்கள்
நான் வன்மத்துடன் உச்சரித்தேன்
அதனது பெயர்களை -
மிக இளமையில் அறிந்தேன்
அது கொண்டாடுவோரது வஞ்சகங்களை.
உனது கரங்களைப் பிடித்து
ஓடிச் செல்வேன்
குழந்தைகள் தம் தாயின் ஆதிக் குகையின்
கிழியல்களைக் கொண்டு ஓடிய
அதிகாரக் குன்றுகள் நோக்கி;
அவற்றினுள் புதைக்கப்பட்ட கதைகள்
அதிருகின்றன எம் மேல்.
நடுங்குகின்ற
என் கைகளை விடுவித்த
வஞ்சிக்கப்பட்ட குரலில்
உன் பாடல்களைக் கேட்கையில்
அதிலிருந்த (என்) இழப்பில்
மனம் சிணுங்கி
ஒரு காலம் உன்னில்
இரகசிய வெறுப்பும் வன்மமும் உள்ளிட
பிறகோ
சமனாய் பேரன்பும் ஆசையும் பீரிட
அருகருகே பயணிக்கும் போழ்துகளில்
வேறு வழியற்று
நான் புணரவும் விழைந்த
__________!
சொற்களெங்கும் தெறிக்கின்ற நீ
ஆதிப் பெண்;
ஏவாள்; சக்தி.
நீ இரையிட்டும் புணர்ந்தும்
உருவாக்கிய பிள்ளைகள்
குன்றுக்கடியில்
ஒடித்துப் போட்டது
உன்(எ)ன்னைத்தான்
என்(உ)ன்னைத்தான்
அதிகாரம் வன்கிழித்ததில்
கையில் வந்த உன் ஜோனிச் சதையோடு
அதில் இரத்த்த மின்னும் உறையாது
உன் கரம் இழுத்து ஓடிய போது, ஒரு தெருவிலே
நீ மறைந்து போக, கையிலிருந்தது
உன் உதடென்று கண்டு
மூர்க்க மிகுந்து முத்தமிட்டேன்;
அதன் இரத்தம் உறிஞ்சி உறிஞ்சி ருசி கண்டு.
தாம் கடந்து வந்த கருவழிப்புகளில்
வேசிகளின் உடல்கள் சென்று வருகிற காயங்கள் பற்றி
- யாருக்குமென்ன?
விசரிகளின் பிள்ளைகளது தகப்பன்களது பெயர்கள்
எக்காளமிட்டுச் சிரிக்க
உள்ளே
உன் *இன்பத்தின் சதையிழந்து
கல்லெறிய தகுதியற்றவன்களால்
எழுதப்பட்டோ படாமலோ,
ஆனால் மழுங்கடிக்கப்பட்டு -
வரலாற்றில் மறைந்தாய்.
வணங்கப்படும் தாயே
கள்ள வேசையே
நடுச்சாமத்தில்
உன் கதவுகளைத் தேடி வருவார்களெனில்
அவரிடம் சொல்லு
அதிருகின்ற உன் சொற்களால்
நிதானமற்ற கூச்சல்களால்
பிறழ்வுற்ற மொழியால்:
எதையும் முழுமையாய் சொல்ல முடியவில்லை
எம்மிடமும் பெயர்கள் இல்லை
சொல்லப்படாதிருக்கின்றன ஏனைய பிற
அப்புறம்
நான் _____________!
உன் ஆன்மாவின் சகோதரி
முடிவுறாதவள்
தாயும் வேசையும்
~
மே, 2007